பிஎஃஐ தடை.. வாக்குகளை பிரிக்கும் "எஸ்டிபிஐ".. காங்கிரஸ் vs பாஜக.. கர்நாடகாவில் யாருக்கு சாதகம்?
பெங்களூர்: பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் இது காங்கிரஸை பின்னுக்குத் தள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பை இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த அமைப்பு வலுவாக இயங்கி வந்த கர்நாடகா மாநிலத்தில் தற்போது காங்கிரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தடை
1947ல் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் ஆர்எஸ்எஸ் உட்பட பல அமைப்புகள் தடையை எதிர்கொண்டு அதனை உடைத்து இயங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்புக்கு தடை விதித்திருப்பது, அந்த அமைப்பை முற்றிலுமாக ஒழித்துவிடுவதற்கான தீர்வாகாது என பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட தடையிலிருந்துதான் வந்தது. ஆனால் இன்று கேரளத்திலும் ஒரு சில மாநிலங்களிலும் பலமாக இயங்கி வருகிறது.

காங்கிரஸ்
எனவே, தடை என்பது நிரந்த தீர்வாகாது என அவர்கள் கூறி வருகின்றனர். இஸ்லாம் அமைப்புகளின் முக்கிய அம்சமாக உள்ள இந்த பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கர்நாடகா மற்றும் கேரளாவில் தீவிரமாக இயங்கி வந்தது. இந்த அமைப்பு பாஜகவை நேரடியாக எதிர்த்தாலும், காங்கிரஸ் கட்சியின் வாங்கு வங்கினை மெல்ல பாதித்து வந்தது. இதன் காரணமாக தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு குறைய இந்த அமைப்பு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

வாக்கு வங்கி
பிஎஃப் மற்றும் எஸ்டிபிஐ வலுப்பெறுவதற்கு முன்னர் வரை குறிப்பாக 2013ல் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருந்துள்ளது. 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி காங்கிரசுக்கு பெரிதும் கை கொடுத்தது. இதன் காரணமாக உடுப்பியில் 3 இடங்களையும், தட்சிண கன்னடத்தில் 7 இடங்களையும், உத்தர கன்னடத்தில் 3 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.
ஆனால் 2018ல் நிலைமை இவ்வாறு இருக்கவில்லை. ஏனெனில் 2018ல் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகள் பலம் பெற்றிருந்தன. இதன் காரணமாக உத்தர கன்னடத்தில் 2, உடுப்பியில் 0, தட்சிண கன்னடத்தில் 1 என்கிற அளவில் காங்கிரஸ் சுருங்கியது. தங்களிடம் உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை எஸ்டிபிஐ உடைப்பதை காங்கிரஸ் உணர்ந்தது.

ஒற்றுமை
தற்போது பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டதால், காங்கிரஸ் தனது வாக்கு சதவிகிதம் உயர்ந்துவிடும் என நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேரெதிரான கூற்றை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர். அதாவது, தற்போது சிறுபான்மையினர் தாங்கள் ஒடுக்கப்படுவதை உணர்ந்துள்ளனர். எனவே அவர்கள் ஓரணியில் திரள்வார்கள். இதனால் எஸ்டிபிஐ பலமடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது.

நம்பிக்கை
தற்போது வரை, எஸ்டிபிஐ கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றியடையவில்லை. ஆனால் கட்சியின் வாக்கு சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, 2013ல் 3.2% வாக்கு வங்கியை எஸ்டிபிஐ கொண்டிருந்தது. ஆனால் 2018ல் இது 10.5% ஆக அதிகரித்துள்ளது என்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், "பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான். அடுத்த முறை நிச்சயம் நாங்கள் வெல்வோம்" என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

100 தொகுதிகள்
எஸ்டிபிஐ கூறுகையில், "நாங்கள் தேர்தல் அரசியலில் இருக்கிறோம். எங்கள் கட்சி தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கான கட்சி. எனவே எதிர் வரும் தேர்தலில் நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம்" என்று SDPI மாநிலக்குழு உறுப்பினர் ரியாஸ் கடம்பு தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் முசாபர் அசாதி கூறியுள்ளார்.

பாஜக நிலை
அதேபோல பிஎஃப் மீதான தடை அறிவிப்பால் பாஜகவும் பெரிய அளவுக்கு பயனடைய முடியாது என அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஹிஜாப், மதமாற்ற எதிர்ப்பு மசோதா போன்றவை கர்நாடகாவின் மைய பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாலும், எஸ்டிபிஐ வலுவாக உள்ள கடலோர மாவட்டங்களில் இந்த கருத்துக்கள் சர்ச்சையைதான் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் பாஜகவுக்கு உள்ள செல்வாக்கை அதிகரிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எப்படியாயினும் 224 தொகுதிகளுக்கு நடத்தி முடிக்கப்பட்டு வெளியாகும் முடிவுகள்தான் உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications