பீகாரில் பாஜக கூட்டணி தோல்வி எதிரொலி.. நாள் முழுவதும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை
மும்பை: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில், பங்குச்சந்தையில் அதன் தாக்கம் இன்று எதிரொலித்தது. வர்த்தகம் ஆரம்பித்ததும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவை சந்தித்தது. அதன்பிறகு மீண்டாலும் கூட, சரிவுடனே முடிந்தது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியடைந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணி மகா வெற்றியை பெற்றது.
இதனால் மத்திய அரசின் மீதான முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறைந்துள்ளது. இதன்தாக்கம் இன்றைய பங்கு சந்தையில் எதிரொலித்தது. காலை பங்கு சந்தை தொடங்கியதுமே, சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 7800 புள்ளிகளுக்கும் குறைவாக இருந்தது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 143.84 புள்ளிகள் சரிவில் 26,121.40 என்ற புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டியும் 39.10 புள்ளிகள் குறைந்து 7,915.20 புள்ளிகள் வரை குறைந்தது.