பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை: தர்மேந்திர பிரதான் உறுதி!
பாக்தாத்: ஈராக்கில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வந்தாலும், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எவ்வித தடையும் இல்லாததால் பெட்ரோல் விலை தற்போதைக்கு உயராது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, தல் அபார் போன்றவற்றை கைப்பற்றி விட்ட தீவிரவாதிகள், பாய்ஜியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் கைப்பற்றும் எண்ணத்தில் பயங்கரமாக போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ''ஈராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தாலும், அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி வழக்கம் போல் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. எனவே, தற்போதைக்கு பெட்ரோல் விலை உயராது'' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 5 டாலர் உயர்ந்து 112 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.