பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி வரியில்லை... மூலப்பொருட்களுக்கு வரி கட்டணும்! - மத்திய அரசு
கோயில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது அதே நேரத்தில் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி
டெல்லி: கோயில், மசூதி, தேவாலயங்கள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டு தலங்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதம் மற்றும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது சில பொருட்கள் விலை குறைந்துள்ளது , பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி 5 முதல் 28 சதவிகிதம் வரை சில பொருட்களுக்கு வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் உணவு மற்றும் பல பொருட்களின் மீதான வரி வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது. பலர் ஹோட்டல்களுக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர்.
திருப்பதி லட்டு
திருப்பதி, லட்டு முடிக்கணிக்கைக்கு ஜிஎஸ்டி வரியில்லை என்று மத்தியஅரசு அறிவித்தது. அதே நேரத்தில் லட்டு தயாரிக்கப்பயன்படும் கடலைமாவு, நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரியால் திருப்பதி கோவில்களில் அறை வாடகை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கோவில் பிரசாதம் பற்றி மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்னதானத்திற்கு ஜிஎஸ்டியில்லை
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நிறுவனங்கள் சார்ந்த அன்னதானக் கூடங்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.
செய்திகளில் உண்மையில்லை
கோவில் பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி உண்டு என்று சில ஊடகங்களும், நாளேடுகளும் செய்தி வெளியிட்டன. இது உண்மைக்குப்புறம்பான செய்தியாகும். இவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதை உறுதி செய்துகொள்கிறோம்
மூலப்பொருட்களுக்கு வரி
கோவில் பிரசாதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய், உள்ளிட்டவைகளுக்கும், இந்த பொருள்களைப் பிரசாதம் தயாரிக்க அனுப்புவதற்கான போக்குவரத்து சேவை போன்றவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
விலை உயரும்
இந்த மூலப்பொருட்கள் பலவகை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படுவதால், வழிபாட்டு தலங்கள் வாங்குவதற்கு மட்டும் தனி வரி வரம்பு விதிக்க இயலாது என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதங்கள் தயாரிக்கப்படும் மூலம்பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.