நவம்பர் 1ல் இருந்து ஏ.டி.எம். கட்டணத்தை என்ன செய்தால் தவிர்க்கலாம்?
சென்னை: ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தினாலும் கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க செய்ய வேண்டிய சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மாதத்திற்கு மொத்தம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம். நீங்கள் ஏ.டி.எம்.மில் உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை பார்த்தாலும் அதுவும் அந்த 5 முறையில் அடங்கும். மேலும் கணக்கு இல்லாத வங்கியின் ஏ.டி.எம்.மில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
5 மற்றும் 3 முறைக்கு அதிகமாக ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கார்டுகள்
கார்டுகள் ஏற்றுக் கொள்ளும் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குங்கள். அதே சமயம் ஓவராக செலவு செய்வதுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
திட்டமிடுங்கள்
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் தான் உண்டு என்னும் அளவுக்கு கையில் பணம் இல்லாமல் இருக்காதீர்கள். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கையில் தேவையைவிட கூடுதல் தொகையை எடுக்கவும். அடுத்த 8 முல் 10 நாட்களில் வரும் செலவுகளை மனதில் வைத்து பணம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சொந்த வங்கி ஏ.டி.எம்.
பிற வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையம் அருகில் இல்லாவிட்டால் மட்டுமே பிற வங்கி ஏ.டி.எம்.மை பயன்படுத்துங்கள்.
வீட்டில் பணம்
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அடிக்கடி ஏ.டி.எம்.மை பயன்படுத்த வேண்டி இருக்காது.
வங்கி இருப்பு
உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, போன் பேங்கிங் மூலமாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்த வேண்டாம்.