செம.. விநாயகருக்கு கோவில் கட்டிய முஸ்லிம்! சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
சாம்ராஜ் நகர்:கர்நாடகத்தில் ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில் தான் அம்மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவர் விநாயகர் கோவில் கட்டி அர்ச்சகரை நியமித்து பூஜைகள் செய்து வருகிறார்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முஸ்லிம்கள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கடலோர கர்நாடக மாவட்டங்களில் கோவில்களில் கடைகள் நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சிகளை வாங்க கூடாது என இந்து அமைப்பினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர். மேலும் பழங்கள், பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மதநல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்
இதற்கிடையே மசூதிகளில் தொழுகைகளுக்கு அழைக்க பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மராட்டியத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்வாறாக தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில் மதநல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தான் முஸ்லிம் ஒருவர் விநாயகருக்கு கோவில் கட்டி அர்ச்சகர் நியமித்து பூஜைகள் நடத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கோவில் கட்டிய முஸ்லிம்
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வசிப்பவர் பி.ரகுமான். இவர் நீர்ப்பாசனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது சிக்கஹோலே, சுவர்ணாவதி அணைக்கட்டுகளில் கேட்கீப்பராக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கஹோலே அணைக்கட்டு அருகே விநாயகருக்கு கோவில் கட்டினார்.

அர்ச்சகர் நியமித்து பூஜை
தற்போது கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்து மாதசம்பளமாக ரூ.4 ஆயிரம் வழங்குகிறார். கோவிலில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. பழம், பூ, தேங்காவுடன் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் நடத்ப்பட்டு வருகிறது. பக்கத்து கிராம மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கான காரணம் என்ன
நீர்ப்பாசனத்துறை பணியில் இருந்து பி ரகுமான் 2018 ல் ஓய்வு பெற்றார். முன்னதாக ஓய்வு பெற ஒரு மாதம் இருந்தபோது அருகே உள்ள கோவிலில் விநாயகர் சிலை திருடு போனது. இதனால் விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என நினைத்தேன். இதை விநாயகரும் கனவில் வந்து கூறியதாக தெரிவிக்கும் ரகுமான், தனது ஓய்வூதிம் உள்ளிட்ட பணத்தை வைத்து கோவில் கட்டியுள்ளார்.

வேறுபாடு எங்கே
இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛எனக்கு அல்லா எப்படியோ, அதேபோல் இந்துக்களுக்கு சிவன். அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு நிறத்திலான ரத்தம் தான். இதில் என்ன வேறுபாடு உள்ளது.'' என்றார். இவரது செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருவதோடு, மதநல்லிணத்துக்கு உதாரணமாக ரகுமான் இருக்கிறார் என பலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications