இதுதான் தாலிபான் மனப்பான்மை.. ஹரியானா விவசாயிகள் மீதான போலீஸ் தடியடி பற்றி சஞ்சய் ராவத் காட்டம்
சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலை கண்டித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தாலிபான் மனநிலையில் அரசு செயல்படுவதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய ஹரியானா விவசாயிகள் நீண்ட காலம் போராடி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை, விவசாயிகள் மீது போலீசார், சரமாரியாக தடியடி நடத்தினர்.

இதனால், 10 விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைவர்கள் சென்ற சாலையில் விவசாயிகள் மறியல் செய்து போராட்டம் நடத்தியபோது இதுபோல சரமாரியாக போலீசார் தடியடி நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அவமானகரமானது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்கள், தாலிபான் மனப்பான்மை. இந்த அரசு எப்படி, ஏழைகளுக்கான அரசு அல்லது விவசாயிகளுக்கான அரசு என்று கூறிக்கொள்ள முடியும். விவசாயிகளின் மன் கி பாத் கேட்கப்படவில்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications