மசூதியை அடித்து நொறுக்கிய கும்பல்.. தொழுகை செய்தவர்களுக்கு கொலை மிரட்டல்.. அரியானாவில் பதற்றம்
சண்டிகர்: அரியானா மாநிலம் குருகிராமில் திடீரென்று மசூதிக்குள் நுழைந்த கும்பல் மக்களை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு மசூதியை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலர் பேசி வருகின்றனர். குறிப்பிட்ட ஜாதி, மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிலர் கூறும் கருத்துகள் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி விடுகிறது.
கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்பட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அரியானா மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

4 முஸ்லிம் குடும்பம்
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் போரா காலன் என்ற இடம் உள்ளது. இங்கு 4 முஸ்லிம் குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் அந்த பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் சமீப காலமாக அந்த 4 குடும்பத்தையும் அங்கிருந்து வெளியேற்ற சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மசூதியில் நுழைந்து தாக்குதல்
இந்நிலையில் நேற்று மாலையில் போரா காலன் பகுதியில் உள்ள மசூதியில் 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொழுகைக்கு சென்றனர். அவர்கள் மசூதியின் உள்ளே இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று ஒரு கும்பல் அத்துமீறி மசூதிக்குள் நுழைந்து அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. மேலும் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தனர்.

மசூதியை அடித்து சேதம்
இதனால் அவர்கள் பயந்து போயினர். மேலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் மசூதியை அடித்து சேதப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் மசூதியின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவம் குறித்து பிலாஸ்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் 12க்கும் அதிகமானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 295-ஏ (வேண்டுமென்றே மத நம்பிக்கைகளை சீர்குலைத்தல்), 323 (காயப்படுத்துதல்), 506 (குற்றம் புரிதல்), 147 (கலவரம்), 148 (ஆயுதங்களை ஏந்தி கலவரம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications