பஞ்சாப்.. ஆம் ஆத்மி சூப்பர் மூவ்.. அகாலி தளமும் செம போட்டி.. காங்கிரஸ் சண்டையால் யாருக்கு லாபம்?
சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசியலில், காங்கிரஸ் VS காங்கிரஸ் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் விருப்பத்துக்கு மாறாக மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்து இருக்கிறது.
சோனியா காந்திக்கு கடிதம் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் சித்து நியமனத்தை எதிர்த்து தனது கருத்தை அமரீந்தர் சிங் பதிவு செய்து இருந்தாலும் கூட சுத்தமாக அவர் கருத்து எடுபடவில்லை.

அமரீந்தர் சிங் செல்வாக்கு
கடந்த லோக்சபா தேர்தலின்போது பஞ்சாப் மாநிலத்தில் பாஜக பெரிதாக சோபிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அமரீந்தரின் தனிப்பட்ட செல்வாக்குதான் என்று பேச்சுகள் எழுந்தன. ஆனால் அவருக்கு 80 வயது ஆகிவிட்டது. தற்போது இந்தியாவிலேயே அதிக வயதான முதல்வர் அமரிந்தர் சிங்தான். எனவே கட்சிக்கு புதிய தலைமுறை தலைவரை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது .

சித்து தலைவர்
மேலும் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் இயல்பாக ஆட்சிக்கு எதிராக எழுப்பக்கூடிய அதிர்ச்சி அலைகளை சமாளிக்க நவ்ஜோத் சிங் சித்து அந்த கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது உதவும் என்பது காங்கிரஸ் தலைமை திட்டமாக இருக்கிறது. பழைய முகத்திற்கு ஓட்டு போடுவதை விட புதிய முகத்திற்காக ஓட்டு போட விரும்பும் மக்கள் சித்துவிற்காக காங்கிரசுக்கு மறுபடி ஓட்டு போடுவார்கள் என்று பிரியங்கா காந்தி உறுதியாக நம்புகிறார். அவர்தான் நவ்ஜோத் சிங் சித்துவிற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் வாதிட்டு அவருக்கு தலைவர் பதவியை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் உட்கட்சி பூசல்
தேர்தல் பிரச்சாரங்களின் போது அமரீந்தர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவரும் கைகளை கோர்த்தபடி அல்லது கட்டி அணைத்தபடி போஸ் கொடுக்க கூடும். ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய கருத்து வேற்றுமை காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு முதல்வரின் ஆதரவாளர்கள் இந்த தேர்தலில் சரியாக ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் அது அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு வாக்குகளை மடைமாற்றம் செய்வதற்கு உதவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .

காங்கிரசால் யாருக்கு ஆதாயம்
காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நவ்ஜோத் சிங் சித்து முதல்வராக வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் தேர்தலில் களப் பணி ஆற்றுவதை அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் தவிர்க்க கூடும் என்கிறது கள நிலவரம். அதேநேரம் அகாலி தளம் கட்சி முதல்வர் வேட்பாளராக சுக்பிர் பாதலை, முன்னிறுத்துகிறது. அவருக்கு வயது 59 . சித்துவுக்கு வயது 57. எனவே இருவருக்குமிடையேதான் முதல்வர் பதவிக்கான பந்தயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகாலிதளம் கட்சி கூட்டணி உறுதி செய்து இருக்கிறது. இருப்பினும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு 2015ஆம் ஆண்டு போதைப்பொருள் விவகாரம் உள்ளிட்டவை அகாலிதளம் கட்சிக்கு எதிராக இன்னும் கசப்பாக இருக்கக்கூடிய விஷயங்களாக உள்ளன. இந்த இடத்தில்தான் ஆம் ஆத்மி கட்சி தடம் பதிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி காய் நகர்த்தல்
இதுவரை, ஆம் ஆத்மி கட்சி அனைத்து சரியான நகர்வுகளையும் செய்துள்ளது - முன்னாள் எஸ்ஐடி தலைவர் குன்வர் பிரதாப் சிங்கை ஆம் ஆத்மி தங்களஅ கட்சியில் சேர்த்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் ஒரு சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி. மேலும், பஞ்சாபின் மூத்த விவசாய தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாகவும், மின் கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அது உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications