100, 200க்கே தாளம் போடும் மக்கள்.. கட்டு கட்டாய் கரன்சிகள் மறுபக்கம்.. இதுவரை ரூ. 377 கோடி பறிமுதல்
10 நாட்களில் 137 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 100, 200- ரூபாய்க்கே நாம தாளம் போட்டுட்டு இருக்கோம்.. மறுபக்கம் கோடி கோடியாய், கட்டுக்கட்டாய், கலர் கலராய்.. பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
எப்போது தேர்தல் தேதி அறிவித்தார்களோ.. அப்போதே தேர்தல் நடத்தை விதி அமலில் வந்துவிட்டது. ஓட்டுக்கு பணம் என்பது நாடு முழுவதும் எழுதப்படாத விதி போலும்.. அதனாலேயே தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும்படைகள் இறங்கின.
போவோர் வருவோர் என ஒருத்தரையும் விடாமல் சோதனை நடத்தி வருகிறது.. இதை தவிர முக்கியமான நபர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்கள், துப்பு தரப்பட்டு அதன்மூலம் சோதனை.. என பல வழிகளில் இறங்கி அதிரடிகளில் இறங்கி வருகிறது.
ஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ.. இல்லாட்டி விஷமா.. டாக்டர் ராமதாஸ் சரமாரி தாக்கு
பறிமுதல்
இவ்வளவு பிடித்தோம், அவ்வளவு பிடித்தோம் என்று தினம் ஒரு கணக்கையும் சொல்லி, சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த கட்டுக்கட்டு கலர் கலர் நோட்டுகளை நமக்கு காட்டியும் வருகிறார்கள். இவ்வளவு பணத்தையும் நாம இப்படி பார்த்துக்கிட்டால்தான் உண்டு!
தங்கம் வெள்ளி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏப்ரல் 4 அதாவது நேற்றைய தேதிவரை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளால் நாடு முழுவதும் 377 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் பணம்தான்... இதைதவிர, 312 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்கள்
இதில் நம்ம ஊர் மானம்தான் நாடு முழுவதும் பறக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் அதிக அளவாக 137 கோடி ரூபாய் பணமும், 135 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்! இதைதவிர 26 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 26 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பறிக்கும் படை
இதில் வேலூரில் நடைபெற்ற சோதனை, விசிக நிர்வாகிகள் வந்த வாகனத்தில் நடைபெற்ற சோதனை என எல்லாமே அடங்கும். அது மட்டுமல்ல.. மளிகை கடை, ஆஸ்பத்திரி செல்பவர்களிடம் பறக்கும் படை, "பறிக்கும் படையாக" உள்ளது என்று சீமான் சொன்னதும் அடங்கும்.
துப்பு தருகிறார்கள்
இதெல்லாம் போதாது என்று, "மோடியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கின்றது, போய் பறிமுதல் செய்ய முடியுமா? ஓபிஎஸ் தன்னுடைய மகனுக்காக 1000, 2000 தருகிறாரே, அது போட்டோவாக வருகிறதே, அங்கே ஏன் போகவில்லை" என்று ஸ்டாலினும், "அமமுக வேட்பாளர் 40 கோடி பதுக்கி வெச்சிருக்கார், அங்கே எப்போ ரெய்டுக்கு போவாங்களோ "என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தங்களையும் அறியாமல் தேர்தல் ஆணையத்துக்கு துப்பு கொடுத்து கொண்டு வருகிறார்கள்!
திருந்துங்கள்
இருந்தாலும்.. நம்ம தமிழ்நாட்டில இவ்வளவு பணம் புழக்கத்தில் இருக்குதா என்று ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. பணம் வாங்கும் வாக்காளர்களே திருந்துங்கள்.. நீங்க திருந்தினாதான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கும்.