2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு.. பெரும் சோகத்துடன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய ஓபிஎஸ்
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? என்பது தொடர்பாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தமக்கு 2 பேர் மட்டுமே ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்தாராம் ஓபிஎஸ். ஒருகட்டத்தில் ஈபிஎஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்த போது அதை ஏற்க முடியாமல் கண்ணீர் மல்க அந்த கூட்டத்தை விட்டே 2 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறினார் ஓபிஎஸ் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவர் (எதிர்க் கட்சித் தலைவர் பதவி) யாருக்கு என்பது தொடர்பாக முடிவு செய்ய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 2-வது முறையாக சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ஓபிஎஸ்-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள்.. பலம் 9 ஆக உயர்வு- ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!
இதனால் ஓபிஎஸ், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்தானே முன்னாள் சபாநாயகர் தனபால். அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கினாலும் உங்களுக்கு ஓகேதானா? என கேட்டிருக்கிறார். ஓபிஎஸ்-ன் இந்த பிடிவாதத்தை ஈபிஎஸ் கோஷ்டி ரசிக்கவில்லை.
வாக்கெடுப்பு- ஈபிஎஸ் சவால்
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஈபிஎஸ், அண்ணே நீங்க, நான், தனபால் மூன்று பேரும் போட்டியில் இருக்கிறோம். 3 பேரில் யாருக்கு அதிக ஓட்டு கிடைக்குதோ அவங்களை ஒருமனதாக ஏற்றுக் கொள்வோம் என சீரியசாகவே கேட்டிருக்கிறார். அப்போது ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 2 எம்.எல்.ஏக்கள்தான் பேசியுள்ளனர்.
2 எம்.எல்.ஏக்கள் தானா?
அதுவரை தமக்கு 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது; தலித் தலைவரான தனபாலை முன்னிறுத்தினால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால் தென் தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 2 எம்.எல்.ஏக்கள்தான் தமக்காக வாதாடுகிறார் என புரிந்து கொண்ட ஓபிஎஸ் நொறுங்கிப் போனாராம்.
எடப்பாடிதான் என முடிவு
அப்போதுதான் ஓபிஎஸ் அணியின் மிக மோசமான பலவீனத்தை பயன்படுத்தி, ஈபிஎஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்; அதையே இந்த கூட்டத்தில் முடிவாக அறிவிப்போம் என அவரது கோஷ்டி கோரஸ் பாடியிருக்கிறது. இதில் மனம் உடைந்து போன ஓபிஎஸ், நீங்க என்னவோ முடிவு எடுங்க.. நீங்களே எல்லா பதவியிலும் இருந்துட்டுப் போங்க என பொங்கிவிட்டாராம்.
ஓபிஎஸ் விட்ட கண்ணீர்
அத்துடன் அந்த கூட்டத்தில் இருந்து ஆத்திரம் பொங்க, கண்ணீர் மல்க 2 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி இருக்கிறார் ஓபிஎஸ். இதைபற்றி எல்லாம் கவலைப்படாத ஈபிஎஸ் கோஷ்டி, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் என முடிவெடுத்து, ஓபிஎஸ்-ன் கையெழுத்துடன் கூடிய லெட்டர் ஹெட்டில் அறிக்கையாகவே வெளியிட்டது. இதனால் எதனையும் வெளியில் கொட்ட முடியாமல் தவித்திருக்கிறார் ஓபிஎஸ்.
அரசியல் விளையாட்டுகள்
அப்போதுதான் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அதிமுக லெட்டர் பேடு இல்லாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஓபிஎஸ். அவரது கோபத்தைப் புரிந்து கொண்டவராக உடனே நேரில் சென்று வாழ்த்துப் பெற்று அந்த படத்தையும் ரிலீஸ் செய்து தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.