தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. பாதிப்பு 3ஆக உயர்ந்தது.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இதுவரை இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஓமனில் இருந்து வந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவரது குடும்பத்தினர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
15 வயது சிறுவன்
இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர்தான் தமிழகத்தின் முதல் கொரோனா நோயாளியாவார். அது போல் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தகவல்கள்
இந்த நிலையில் இரண்டாவதாக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ரயிலில் அவர் யாருடன் வந்தார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்
இந்த நிலையில் தமிழகத்தில் 3ஆவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அயர்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு 21 வயது மாணவர் கடந்த 17-ஆம் தேதி வந்தார்.
|
3 பேருக்கு
அவரை சோதனை செய்து பின்னர் வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க அறிவுறுத்தினோம். ஆனால் 18 ஆம் தேதியே அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 3பேருக்கு கொரோனா வைரஸ் இருந்ததும் அதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.