திருநாவுக்கரசு தனக்கோடி வேல்முருகன் எனும் நான்..வந்தே மாதரம், பெரியார் வாழ்க... சட்டசபை 'கலகல'
சென்னை: தமிழக சட்டசபையில் 223 புதிய எம்.எல்.ஏக்கள் நேற்று பதவியேற்றனர். இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியேற்புக்கு பின் எஞ்சிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொள்வர்.
16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. சட்டசபையில் முதல் நிகழ்வாக புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்.
நீண்டகால சிறைவாசம்... 7 தமிழர், இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு
முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் உறுதி மொழி எடுத்தனர். அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன் இருவரும் கொரோனா பாதிப்பால் சட்டசபைக்கு வரவில்லை.
உளமாற... கடவுள் அறிய
இதன்பின்னர் அகரவரிசைப்படி எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். திமுக எம்.எல்.ஏக்கள் உளமாற உறுதி கூறுகிறேன் என்றே உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதிமுக, பாஜக அணி எம்.எல்.ஏக்கள் கடவுள் அறிய என உறுதி மொழி எடுத்தனர். காங், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களும் கடவுள் அறிய என கூறி உறுதி மொழி எடுத்தனர்.
வேல்முருகனின் ஸ்டாலின் பாணி
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாணியில் பதவியேற்றார். அதாவது திருநாவுக்கரசு தனக்கோடி வேல்முருகன் எனும் நான் எனக் கூறி பதவியேற்றார். அவரது இந்த பதவியேற்பு நிகழ்வு வீடியோவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
வந்தே மாதரம் முழக்கம்
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உறுதிமொழி எடுத்து முடித்ததும் வந்தே மாதரம் என முழங்கினார். கொமதேக தலைவர் ஈஸ்வரன், தீரன் சின்னமலையை வணங்குகிறேன் என கூறி உறுதிமொழி வாசிப்பை முடித்தார். விசிக எம்.எல்.ஏ .பாலாஜி, அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் வாழ்க என முழக்கம் எழுப்பினார்.