அன்று கன்னக்குழியழகன் சின்னத்தம்பி.. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சின்னத்தம்பி.. முழங்கும் தமிழகம்!
மக்களிடையே 27 வருடம் கழித்து சின்னதம்பி பெயர் பிரபலமாகி வருகிறது.
சென்னை: அன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு சின்னதம்பி என்று ஒலித்த தமிழக மக்கள் இன்று மீண்டும் அதே பெயரை முணுமுணுக்க தொடங்கி உள்ளனர்.
1991-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் சின்னதம்பி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு படம். தாலி சென்ட்டிமென்ட் படங்களின் மூலம்.
அந்த படம் பற்றின பல கேள்விகள் இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களை குஷ்பு ஜூரம் பிடித்து கொண்டதற்கு முக்கிய காரணமாக இருந்த படம் சின்னதம்பி.

தமிழக மக்கள்
பிரபுவின் அப்பாவி நடிப்பா? இளையராஜாவின் இசையா? மனோரமாவின் தாய்ப்பாசமா? எதை பற்றியும் தனித்தனியாக பேசமுடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக அன்றைய தமிழக மக்களை பேச வைத்த படம். 9 தியேட்டர்களில் வருடக்கணக்கில் ஓடிய படம். 27 வருடங்கள் கடந்து இன்றைக்கு இதே சின்னதம்பி என்ற பெயரை தமிழக மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

சின்னதம்பி யானை
சினிமா மீது மட்டுமல்ல, சக உயிரினங்கள் மீதும் தமிழக மக்களுக்கு உள்ள பந்தத்தையும், பரிவையும் இது வெளிப்படுத்துவதாக உள்ளது. சின்னதம்பி என்ற யானையை ஒரு குறிப்பிட்ட பகுதியை தவிர வேறு யாருமே அவ்வளவாக பார்த்தது கிடையாது.

உணர்வுபூர்வமானது
ஆனாலும் உறவை பிரிந்து, பசி மயக்கத்தால் இன்று படாதபாடு படுவதன் வலியை தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் யானையா? மனிதனா? என்று கோர்ட் வரை விஷயம் சென்றுள்ளது. அன்றைக்கு சினிமா எனப்படும் நிழல் சின்னதம்பிக்காக அந்த பெயரை உச்சரித்தவர்கள், இன்று உணர்வு பூர்வமாக உச்சரிக்க தொடங்கிவிட்டனர்.

அன்பு மழை
பட்டி தொட்டியெங்கும் இன்று சின்னத்தம்பி குறித்த பேச்சுதான். இன்னிக்கு "எங்க இருக்கான் நம்ம பய" என்று செல்லமாக கேட்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.. "பார்ரா, கும்கிகளை கூட பிரண்டாக்கிட்டானே பலே ஆள்டா இவன்" என்று பலரும் சின்னத்தம்பியின் அன்பை சிலாகித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் இன்று சின்னத்தம்பி நீக்கமற நிறைந்திருக்கிறான்.

கரிசனங்கள்
இணையதளங்களை இந்த விஷயத்தில் தமிழக மக்கள் சரியாக பயன்படுத்தியும் வருகிறார்கள். சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்பதில்தான் எத்தனை எத்தனை அக்கறை? எவ்வளவு ஆழ்ந்த கரிசனங்கள்? ஆயிரம் குறை சொன்னாலும் சரி, எந்த உயிருக்கு ஏதாவது ஒன்னுன்னா நம் மக்களை அடிச்சிக்க ஆள் கிடையாது. இதுதான் தமிழக ஸ்பெஷாலிட்டியே!!












Click it and Unblock the Notifications