திமுக இளைஞரணியில் புதிய படை! உதயநிதி ஸ்டாலினோடு கரம் கோர்க்கும் புதிய நிர்வாகிகள் யார்?
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் இணைந்து செயலாற்றக் கூடிய துணைச் செயலாளர்களாக புதிய படை ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.சேகர், பைந்தமிழ் பாரி, அமைச்சர் அன்பில் மகேஷ், தாயகம் கவி, ஆகியோர் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 9 பேர் புதிய துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜோயல், ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் தான் இனி திமுக இளைஞரணி துணைச் செயலாளர்களாக உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து பணியாற்றவுள்ளார்கள்.

திமுக இளைஞரணி
திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரால் உற்றுநோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளராக 2வது முறை மீண்டும் உதயநிதி ஸ்டாலினை நியமித்துள்ள துரைமுருகன், 9 புதிய துணைச் செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

அனைவருக்கும் பிரதிநிதித்துவம்
இதில் தூத்துக்குடி ஜோயல் மட்டும் ஏற்கனவே இளைஞரணி துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள அனைவரும் புதியவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மாவட்டங்களை, சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜோயல் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றாலும் கூட சென்னையிலேயே தங்கியிருக்கக் கூடியவர்.

எந்தெந்த ஊர்
இதேபோல் ரகு ராமநாதபுரம், இளையராஜா திருவாரூர், அப்துல் மாலிக் செங்கல்பட்டு, பிரகாஷ் ஈரோடு, பிரபு திருவள்ளூர், சீனிவாசன் கிருஷ்ணகிரி, பிரதீப் ராஜா மதுரை, ஆனந்தகுமார் நாமக்கல் என இளைஞரணி துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இளைஞரணியில் மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றியவர்கள் இவர்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பழைய நிர்வாகிகள் விடுவிப்பு
தாயகம் கவி, ஆர்.டி.சேகர், பைந்தமிழ் பாரி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே விரைவில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications