நெருங்கும் கோடை.. வீட்டு வாசலிலேயே ஐஸ்கிரீம்கள்.. ஆவினின் ‛வாவ்’ ஐடியா.. விற்பனையாளராகவும் மாறலாம்!
சென்னை: வெயில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில், மக்கள் வசிப்பிடங்களுக்கே நேரடியாக சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதனால் மக்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வெயிலில் அலைய வேண்டிய தேவை இருக்காது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டம் மட்டுமல்லாமல், தொழில்முனைவோர்களை உருவாக்கும் விதமாக விற்பனையாளராக விரும்புவோருக்கும் ஆவின் அழைப்பு விடுத்துள்ளது.
சேலத்தில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை! தினமும் 6,000 லிட்டர் உற்பத்தி! திறந்து வைத்த ஸ்டாலின்!
கோடைக்காலத்திற்கு தயாராகும் ஆவின்
தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அரசு நிறுவனம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆவின் பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மற்ற காலங்களை காட்டிலும் கோடைக்காலத்தில் ஆவின் ஸ்டால்களை கையில் பிடிக்க முடியாது. ஏனெனில், லஸ்ஸி, மோர், பாதாம் கீர் என வெயிலுக்கு இதமான பானங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் கோடைக்காலத்தில் ஆவினுக்கு அதிக லாபமும் கிடைத்து வருகிறது.
வீடு தேடி வரும் ஐஸ்கிரீம்கள்
இந்நிலையில், கோடைக்காலத்தில் மக்களை மேலும் கவர்ந்திழுக்கும் விதமாக சூப்பரான திட்டத்தை ஆவின் முன்னெடுத்துள்ளது. அதாவது, கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால், வெளியில் வெயில் அடிப்பதை பார்த்தால், இந்த வேக்காட்டில் வெளியே செல்ல வேண்டுமா என்ற எண்ணத்தில் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி விடுவர். மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட ஆவின் நிறுவனம் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாக வந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
தொழில்முனைவோராக வாய்ப்பு
ஆவின் ஐஸ்கிரீம் மட்டுமல்லாம் மோர், லஸ்ஸி உள்ளிட்டவற்றையும் மக்கள் இருப்பிடங்களுக்கு தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டிகள் மூலமாக கொண்டு வந்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும் பணிகள் முக்கிய ஆலைகளில் நடைபெற்று வருகின்றன. அதேபோல, இந்த ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோரை தொழில்முனைவோராக மாற்றும் நடவடிக்கையிலும் ஆவின் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து தொழில்முனைவாரக விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன நிபந்தனைகள்?
விற்பனையாளராக சேருபவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோர் காப்புத் தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ.30 ஆயிரத்திற்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபத்தில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வழங்கப்படும். இதற்காக வங்கிக்கணக்கு, குடும்ப அட்டை, 2 அரசு அலுவலர்கள் சான்றளித்த நகல்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.