தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் ஏ.சி. பஸ்கள் இயக்கம்.. 702 பஸ்கள் தயார்.. பயணிகள் ஹேப்பி
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஏசி பஸ்கள் இயக்கப்பட உள்ளன
சென்னை: தமிழகத்தில் சுமார் 5 மாத காலத்துக்கு பிறகு, நாளை முதல் மீண்டும் ஏசி பஸ்கள் சேவை தொடங்கப்பட இருக்கிறது... அதற்காக ஏசி பேருந்துகளை தயார் செய்யும் பணியில் போக்குவரத்து பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது... அதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பேருந்து சேவைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.
திமுகவுக்கு சிக்கல்.. அந்த 3 அமைச்சர்களுக்கு குறி?.. ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட்..அடுத்து என்னாகும்?
இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகள் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது...
பாதிப்பு
அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன... ஆனால் ஏசி பஸ்கள் மட்டும் இயக்குவதற்கு தடை தொடர்ந்தபடியே இருந்தது. ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருந்ததால் ஏசி பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, ஏசி பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு பயணிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
ஏசி பஸ்கள்
அப்போது, "அக்டோபர் 1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு போக்குவரத்தை சார்ந்த 702 ஏ.சி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை மாநகரில் 48 ஏசி பஸ்களும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 ஏசி பஸ்களும் இயக்கப்படும்" என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்..
பணிமனை
இந்த அறிவிப்பையடுத்து ஏசி பஸ்களை தூய்மைப்படுத்தி, பழுதுபார்க்கும் பணி ஆரம்பமானது. இத்தனை மாதமும் ஏசி பஸ்கள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. புதிதாக வாங்கப்பட்ட ஏசி பஸ்களும்கூட கடந்த 18 மாதங்களாக இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பராமரிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததால், அதிலிருக்கும் ஏசி இயந்திரம் பழுதடைந்தன. அமைச்சரின் அறிவிப்புக்கு பிறகு, அவைகளை தூய்மைப்படுத்தி, பழுதுபார்க்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
கிருமிநாசினி
தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தையும் எட்டி உள்ளது. பஸ்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.. நாளை முதல் அவை இயக்கப்படவும் உள்ளன.. ஏசி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாளை முதல் தமிழகம் முழுவதும் ஏசி பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.