கொல்வதற்காகவே துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த கைலாஷ்.. சவுகார்பேட்டை மூவர் கொலையில் பரபர தகவல்!
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான கைலாஷ் என்பவர் கொலை செய்வதற்காகவே துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
Recommended Video
சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர்
கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து வழக்கு புனே நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
சிசிடிவி காட்சிகள்
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன் தினம் இரவு புனேயில் இருந்து சோலாப்பூருக்கு, ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் உள்ளிட்டோர் காரில் தப்பியோடுவது குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
3 பேர் கைது
இந்த நிலையில் கைலாஷ் (32), ரவீந்திர நாத்கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 3 பேரையும் கைலாஷ், ஜெயமாலா உள்ளிட்ட 6 பேரும் தலித் சந்த் உள்ளிட்டோரை 5 முறை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
துப்பாக்கிச் சுடும் பயிற்சி
இதுகுறித்து போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலையை அரங்கேற்ற கைலாஷ் என்பவர் ஒன்றரை மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வந்துவிட்டதும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
5 துப்பாக்கிகள்
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கைலாஷ், கள்ளக்குறிச்சியில் சில துப்பாக்கிகளை வாங்கி, சப்தம் குறைவாக கேட்கும் துப்பாக்கியை வைத்து கொல்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. கள்ளத்தனமாக வாங்கிய 5 துப்பாக்கிகளில் எந்த துப்பாக்கியால் சுட்டால் சப்தம் கேட்காது என்பது குறித்து கைலாஷ் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இதற்காக துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொண்டதும் தெரிந்தது.
சொத்துக்காக கொலை
இது தொடர்பாக மற்ற 3 பேரை கைது செய்ய போலீஸார் புனே சென்றுள்ளார்கள். இந்த துப்பாக்கி தமிழகத்தில் வாங்கப்பட்டது இல்லை என தெரியவந்தது. சொத்துக்காக அவர்கள் மூவரையும் திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. ஜெயமாலாவும் கைலாஷும் சில தினங்களுக்கு முன்னர் தலீல் சந்த் குடும்பத்தினரை மிரட்டிவிட்டு சென்றது தெரியவந்தது.