கேப்டன் சார் கர்ணன்! நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சியும் குணப்படுத்தும்! நெகிழ்ந்த சூரி!
சென்னை : உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவரும், நடிகருமான 'கேப்டன்' விஜயகாந்த், ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்லை, அவர் செய்த புண்ணியமும் மீனாட்சி அம்மனும் அவரை விரைவில் குணப்படுத்தும் என நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள்அகற்றப்பட்டன.
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்.. என்ன ஆச்சு? - அறிக்கை விட்ட தேமுதிக!
விஜயகாந்த் உடல்நிலை
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். இதனையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், கட்சியினர், அரசியல் திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை மேற்கொண்டதோடு, விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துகளை கூறினர்.
தீவிர சிகிச்சை
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தனக்கு வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில்,"தொலைபேசி வாயிலாகவும் ட்விட்டர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திரு பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கு எனது நன்றி" என விஜயகாந்த் கூறியிருந்தார்.
தேமுதிக புகார்
மேலும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், 'மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக சிலயூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பின. இதன் மூலம் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த திட்டமிட்டன. எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் தொலைகாட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.
நடிகர் சூரி உருக்கம்
இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவரும், நடிகருமான 'கேப்டன்' விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என நடிகர் சூரி உருக்கமாக பதிவிடுள்ளார். அதில்,"தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!" என பதிவிட்டுள்ளார்.