அஜித்துடன் மோதல்.. ரசிகர்களை உசுப்பேற்றும் விஜய்! திடீர் சந்திப்பு ஏன்? சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி
சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சந்திப்பு நடத்துவது அஜித்தின் துணிவு படத்துடன் மோதும் வாரிசு படத்திற்காக ரசிகர்களை உசுப்பேற்றும் செயல் என சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்து உள்ளார்.
விஜய் போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் மீது கரிசனம் வெளியாவது அவர்களுடைய திரைப்படங்கள் ரிலீசாகும் நேரத்தில்தான். இந்த சந்திப்பு கூட வாரிசு படத்தோடு தொடர்புடையதாகவே நான் நினைக்கிறேன்.
பனையூரில் பலமுறை ரசிகர்கள் சந்திப்பு நடந்தாலும் விஜய் வராமல் புஸ்ஸி ஆனந்த் தான் அவர்களை சந்தித்து வருகிறார். இன்று விஜய் வருவதன் நோக்கம் வாரிசு வெளியாகும் நாளில் துணிவு படமும் வெளியாவதால்தான்.
துணிவு VS வாரிசு
மறுபக்கம் ஆந்திராவில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. துணிவு படத்தை விட வாரிசு படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற நெருக்கடி விஜய்க்கு உள்ளது. துணிவு படத்துக்கு வாரிசு படத்தை விட அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உசுப்பேற்றுகிறாரா விஜய்?
இதையெல்லாம் வைத்து பார்க்கையில், தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதன் மூலம் அவர்களை உசுப்பேற்றிவிட்டு தன்னுடைய வாரிசு படத்தை வெற்றியடைய வைக்கும் தந்திரமாகவே விஜய் இதை நடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். இது அவர் மீது சுமத்துகிற குற்றச்சாட்டாக பார்க்க வேண்டியதில்லை. இது எனது அனுமானம்.
விஜய் பட சர்ச்சை
விஜய்யின் படங்கள் வெளியாகும்போதும் ஒரு சர்ச்சை தெரிந்தோ, தெரியாமலோ உருவாகிவிடும். அதற்கு அந்த படத்தின் கதை, காட்சி, வசனங்கள் காரணமாக இருக்கும். ஆனால், வாரிசு படத்தை பொறுத்தவரைக்கும் இது குடும்ப படம். எனவே அதன் கதை சார்ந்து இதற்கு எந்த சர்ச்சையும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
புதிய பிரச்சனை
இந்த நேரத்தில் ஆந்திராவில் அந்த படத்தை வெளியிடுவதற்கு பிரச்சனை என்ற விசயம் கிடைத்து உள்ளது. அதை தொடர்ந்து சீமான் போன்றவர்கள் எல்லாம் கருத்து தெரிவித்து வாரிசு படத்துக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எனவே தன்னுடைய பங்கிற்கு ரசிகர்களை சந்தித்து இதுகுறித்து ஆலோசிப்பதுகூட வாரிசு படத்துக்கான கூடுதல் விளம்பரத்தை தேடும் உத்தியாகவே நான் பார்க்கிறேன்.
விஜய்க்கு எதிரானது இல்லை
ஆந்திராவில் இந்த படத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டு உள்ள சிக்கல் என்பது விஜய்க்கு எதிரான நடவடிக்கையோ அல்லது தமிழ் திரையுலகிற்கு எதிரான நடவடிக்கையோ கிடையாது. அது தில் ராஜ் என்கிற ஒரு தயாரிப்பாளருக்கும் அவரால் பாதிக்கப்பட்ட இன்னொரு தயாரிப்பாளருக்கும் இடையில் நடக்கும் தனிப்பட்ட விசயம்.
தயாரிப்பாளர்கள் மோதல்
வழக்கம்போல் ஆளுக்கு ஒரு சங்கத்தில் பதவியில் இருப்பதால் சங்கத்தை கேடயமாக பயன்படுத்தி மோதிக்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைகூட ஓரிரு நாட்களிலோ அல்லது வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜ்
என்ன காரணம் என்றால், தில்ராஜ் சக்திவாய்ந்த தயாரிப்பாளர் மட்டுமின்றி சக்திவாய்ந்த விநியோகஸ்தராகவும் இருக்கிறார். நிறைய திரையரங்குகளை ஆந்திராவில் தன் கைவசம் அவர் வைத்து உள்ளார். அதனால், நிச்சயமாக அவருக்கு எதிராக தெலுங்கு திரைப்படத்துறை எந்த நடவடிக்கையிலும் இறங்காது.
சீமான் கண்டனம்
ஆனால், இங்கு சீமான் போன்றவர்கள் இதை மிகப்பெரிய அரசியலாகவும், தமிழ்நாட்டுக்கு பாதகமான விசயமாகவும் காட்டுகிறார்கள். இது சரியானதாக எனக்கு தெரியவில்லை. வாரிசு படம் ஒரு வேளை ஆந்திராவில் திரையிடாமல் போனாலும் அதனால் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது? அதெல்லாம் ஒன்றுமே இல்லை.
வாரிசுக்கு விளம்பரம்
இது ஒரு வணிகம். இந்த வணிகத்தில் ஒருவர் லாபம் அடைவதும் இன்னொருவர் நஷ்டம் அடைவதும் இயல்பு. இதை தமிழ்நாட்டிற்கான பிரச்சனையாக சீமான், வேல்முருகன் திசைதிருப்புவது சரியான விசயம் இல்லை. என்ன இருந்தாலும் இதன் மூலம் வாரிசு படத்துக்கு பெரிய விளம்பரம் கிடைத்து இருப்பதை மறுக்க முடியாது." என்றார்.