"போய் வா சித்ரா".. காற்றில் கலந்த தேவதை.. எப்பவுமே உதிர்ந்து விடாத வாசம் வீசும் "முல்லை"..!
சித்ராவின் வாழ்க்கை இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது
சென்னை: "அவசரப்பட்டு யாரும் இதுபோன்ற முடிவுகளை எடுக்காதீர்கள்" என்று டைரக்டர் மனோபாலா விடுத்துள்ள வேண்டுகோள் அத்துணை மதிப்பு வாய்ந்த ஒன்றாக இந்த சூழலில் பார்க்கப்படுகிறது..! மனித வாழ்வின் மகத்துவத்தை சித்ராவின் இழப்பு மறுபடியும் புரியவைத்து விட்டுபோயுள்ளது!
சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விசாரணை முடிவெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சித்ராவின் இந்த மரணம் பல படிப்பினையை தந்துவிட்டு சென்றுள்ளது.. இந்த பெண்ணுக்கு 28 வயதுதான் ஆகிறது. எத்தகைய சூழலிலும் புன்னகை மாறாமல், மற்றவர்களை உற்சாகமூட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
இவருடைய வாழ்க்கை பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளது.. இவரது துணிச்சல் பல பெண்களுக்கு மோட்டிவேஷனாக உதவியிருக்கிறது..தனக்கு வந்த பல பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டு அதன்மூலம் பல இளம்பெண்களின் கவனத்தை திருப்பியர் சித்ரா... இந்த அசாத்திய திறமைகளுக்கு பிறகுதான் நடிப்பெல்லாம்!
பிறப்பு
"எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது இன்னொரு குழந்தை வேண்டாம்னு மருந்துலாம் சாப்பிட்டாங்களாம்... ஆனாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் பிறந்துட்டேன்" என்று தன் பிறப்பையும் ஒரு போராட்டமாக எடுத்து சொன்னவர் சித்ரா.. அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத சராசரி குடும்பத்தில், பார்ட் டைம் வேலை செய்துகொண்டே தன் காலேஜ் கட்டணத்தை கட்டி படிப்பை முடித்தது அந்த 22 வயதில் பெரும்பாலானோருக்கு இல்லாத துணிச்சல்!
நம்ம வீட்டு பொண்ணு
இந்த தைரியம்தான், எம்எஸ்சி சைக்காலஜி முடித்துவிட்டு, யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராகவும், சித்ராவை முதல் தலைமுறை பட்டதாரியாகவும் உயர்த்தியது. எந்த டிவி நிகழ்ச்சியில் சித்ரா பங்கேற்றாலும், தன் கவனத்தை தன் மீதே குவித்து வைத்திருக்கும் இயல்பை பெற்றவர்.. நம்ம வீட்டு பொண்ணு என்ற அந்தஸ்தில்தான் இவரை கடைசி வரை நம் மக்கள் வைத்து பார்த்தனர்.. இந்த 2 நாட்களாக சித்ராவின் நடிப்பை பற்றி பேசுவதைவிட, அவரது குணத்தையே சோஷியல் மீடியா முழுவதும் பேசிவருவது வியப்பை தந்து வருகிறது.
சித்ரா
பெண்கள் தொகுப்பாளராக பணி புரிந்து அதிலேயே நல்ல பெயர் எடுப்பது ரொம்பவே கஷ்டம்... அவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், விழும் பார்வைகள் அத்தனையும் ஒரே மாதிரி இருக்காது.. பொதுவாக, சில பெண்கள் தங்களுடைய ஃபேஸ்புக்கில் புரொபைல் படம் வைப்பதற்கே பலமுறை யோசிக்கிறார்கள்.. இதே சோஷியல் மீடியாவில் பலவித சிக்கல்கள் வரும் என்று தெரிந்தும், எதற்கும் பயப்படாமல், தினுசு தினுசாக போட்டோ,வீடியோக்களை எடுத்து, அவ்வளவிலும் தன் சிரிப்பை மட்டுமே தவழவிட்டுள்ளார் சித்ரா.
பாசக்கார பெண்
"ஆரம்பத்திலிருந்தே எனக்காக என் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க... அவங்களை ராஜா, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு ஆசை இருந்துச்சு... ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன்... கிடைக்கிற பணத்தைக் குருவி சேர்க்கிற மாதிரி சேத்து வைச்சேன்... எந்த ஈவன்ட்க்கு கூப்பிட்டாலும் பேசப் போயிடுவேன்... கார் டிரைவரை வெச்சால் செலவாகும் என்று, தானே கார் ஓட்டி பழகி, அந்த காசையும் சேர்த்து வெச்சேன்.. ஒரு வீடு கட்டினேன்.. அதில என் அம்மாவை உட்கார வெச்சேன்.. அந்த வீட்டில் சில போர்ஷனை வாடகைக்கு விட்டு, அந்த வாடகை பணத்தை என் அம்மா கையில் சேரும்படி செய்தேன்" என்று 25 வயதிலேயே ஒரு பெண் சொல்வது அத்தனை எளிதான விஷயம் இல்லை.
வாடாத முல்லை
வறுமையிலிருந்து மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்து சேர்வதற்குள் சித்ரா பட்ட பாடு, இந்தகால இளம் பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.. சுயவிருப்பத்துக்கு எதிர்ப்பு, முயற்சிக்கான வெற்றிக்கான போராட்டம் என அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு,மேலே சென்றுவிட்டார் சித்ரா.. சிரித்த முகத்துடன் எத்தனை சோகங்களை அடக்கி வாழ்ந்து வந்துள்ள இந்த "முல்லை" என்றுமே உதிர்ந்து விழாமல், பாசிட்டிவ் என்ற வாசத்தை பரப்பி கொண்டே இருக்கும்.. காலத்துக்கும்!!!