அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிரடி.. நீதிபதியை மாற்றி உத்தரவு.. நாளை முதல் விசாரிப்பது இவர் தான்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, விசாரணையில் இருந்து விலகினார் கிருஷ்ணன் ராமசாமி.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மற்றொரு நீதிபதியை நியமிக்கும்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, அவற்றை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி மீது ஓபிஎஸ் பரபர புகார்.. இன்றும் வறுத்தெடுத்த கிருஷ்ணன்
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த செயல் நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.
நானே விலகி இருப்பேனே
இந்த வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மன்னிப்பு கோரிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கில் தங்கள் முன்பே வாதங்களை முன் வைக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இரு நாட்களுக்கு முன் தன் முன் முறையிட்டிருந்தால் விசாரணையில் இருந்து நானே விலகியிருப்பேன் எனக் கூறினார்.
மனுவாக தாக்கல்
பின்னர், தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்றது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும் புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில், எந்த நீதிபதி முன்பும் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி கையில் முடிவு
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்டு, வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.
நீதிபதி மாற்றம்
இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார்.