அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை..கடைசி நாளில் கடிதம் எழுதலாமா?.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பதில்
ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஜூன் 23ஆம் தேதியுடன் செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதால் கடிதம் எழுத வேண்டிய அவசியமில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசிநாள் ஆகும். இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.
அன்புள்ள அண்ணா.. பன்னீர் செல்வத்தை பாசத்தோடு அழைத்து பஞ்சர் ஆக்கிய எடப்பாடி பழனிச்சாமி
உள்ளாட்சி இடைத்தேர்தல்
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு வந்தனர்.
கையெழுத்து போட கடைசி நாள்
தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சர்ச்சையினால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிங்களை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.
ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
ஒற்றைத்தலைமை விவகாரத்தினால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் முற்றியதால் சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று இறங்கி வந்த ஓ.பன்னீர் செல்வம், கட்சியினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதினார். உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம்
ஏ மற்றும் பி பார்ம் இரண்டிலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடிதம் நிராகரிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு கொடுத்தனுப்பினர். ஆனால் அந்த அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடிதத்தை நிராகரித்தது ஏன் என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி பதில்
அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கழகப் பொருளாளர் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
கூட்டத்தை புறக்கணித்தது ஏன்
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.
கடைசி நேரத்தில் கடிதம்
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.