மாணவி மரணம்.. மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் ஜூலை மாதம் 13ம் தேதி இறந்தார். மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை மாணவியின் பெற்றோர் மறுத்தனர். அதோடு மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் கலவரம்
ஜூலை 17 ம் தேதி திடீரென்று கலவரம் ஏற்பட்டது. பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்தனர். மேலும் சான்றிதழ்களை சூறையாடினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

சீரமைப்பு பணி முடிவு
தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படியும், மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் அனுமதியின் பெயரில் பள்ளி சீரமைப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

திறக்க அனுமதி கோரல்
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ததாகவும், அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுப்பியுள்ளதாகவும், தங்கள் பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 15க்கு தள்ளிவைப்பு
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் எனவும் அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். இதை ஏற்று, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications