அக்னி நட்சத்திரம் முடியப்போகுது.. புழுக்கம் போகலையே..இன்னும் எத்தனை நாளைக்கு சுடும்
கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை:
கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுகிறது. சில ஊர்களில் மழை பெய்தாலும் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.
ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் 'அக்னி நட்சத்திரம்' என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது.

மார்ச்சில் தகித்த வெப்பம்
நடப்பாண்டை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மார்ச் இறுதியில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கியது. வெயிலின் தாக்கம் மிகமிக அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காப்பாற்றிய மழை
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பினர். அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் இவைகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் குளுமையாக இதமாக கழிந்தது.

சுட்டெரித்த சூரியன்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக மே 23ம் தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

சதமடித்த வெப்பநிலை
மே24ம் தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் பதிவானது. 25ஆம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது

வெயில் சுடும்
இந்த நிலையில் நாளையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் விடைபெறுகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications