ஓபிஎஸ் முகமூடி.... மும்முறை முதல்வரே! அம்மாவின் வாரிசே என்ற முழக்கத்தால் பதற்றம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவரது முகமூடி அணிந்து அம்மாவின் வாரிசே, மும்முறை முதல்வரே என்று முழக்கமிட்டனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பலர் இபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி முழக்கமிட்டதால் பரபரப்பும் பதற்றமும் எற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடியதால் முக்கியத்துவம் வாய்ந்தாக அதிமுகவினர் கருதுகின்றனர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. முதல்வர் வேட்பாளர் பற்றி அமைச்சர்கள் ஆள் ஆளுக்கு ஒரு தகவலை கூறிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்த சூழ்நிலையில் இன்றைய செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை முதலே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் அவரது முகமூடியை அணிந்து ஆதரவு முழக்கமிட்டு வருகின்றனர்.
காலை முதலே துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பாக கூடியவர்கள் அம்மாவின் வாரிசே, மும்முறை முதல்வரே என்று முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் செயற்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கிளம்பும் போதே அவரது காரின் மீது ரோஜா மலர்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பலர் இபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி முழக்கமிட்டனர். 2021ல் மீண்டும் முதல்வர் எடப்பாடியார் என்கிற பதாகையை இபிஎஸ் ஆதரவாளர்கள் பிடித்து நின்று கொண்டிருக்கின்றனர்.
அதிமுக செயற்குழு கூட்டம் கூடும் இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இந்த முதல்வர் முழக்கப்போர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.