அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!
Recommended Video
சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.
வரும் லோக்சபா தேர்தலுக்காக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டுக் தூதுவிட்டு வந்தது தேமுதிக.
இந்த விவகாரம் ஊடகங்களில் மூலமாக அம்பலமானதால் தேமுதிக கோபம் ஊடகங்கள் பக்கம் திரும்பியுள்ளது. திமுகவிடம் மிகவும் தாமதமாக சென்றதால் அங்கு ஏற்கனவே தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டது என்று கூறி கதவை சாத்தி விட்டனர். இப்படி திமுக பக்கம் தூது போனது ஆதாரப்பூர்வமாக ஊடகங்களில் வெளியானதால், அதிமுக தரப்பு, தேமுதிகவை கடுப்போடு பார்க்க ஆரம்பித்துள்ளது.
உயர பறந்த தேமுதிக.. அதலபாதாளத்தில் தள்ளி விட்டாரே பிரேமலதா.. இளவரசி மகள் வருத்தம்
வாய்ப்பு போச்சு
இந்த நிலையில்தான் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய பல்வேறு தகவல்கள் யானை தன் தலைமீது மணலை அள்ளி தானே போட்டுக் கொள்வது போன்று இருந்தது. அதிமுக கூட்டணிதான் இப்பொழுது தேமுதிகவுக்கு எஞ்சியிருக்கும் வாய்ப்பு என்று தெரிந்தும் கூட, அதிமுகவை மட்டுமின்றி அந்த கூட்டணியில் உள்ள பாமகவையும் விமர்சனம் செய்தார் பிரேமலதா.
பாமக மீது காழ்ப்புணர்ச்சி?
பாமகவுக்கு முதலிலேயே தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது தான் பிரச்சினைகளுக்கு காரணம். எனவேதான் எங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதனால்தான் அதிமுகவை விட்டு விட்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம், என்று மைண்ட் வாய்ஸ் என நினைத்துக்கொண்டு சத்தமாக பேசி விட்டார் பிரேமலதா. இதைக் கேட்ட பாமக தலைவர்களும், நிர்வாகிகளும் கொதித்துப் போயுள்ளனர். ஏற்கனவே பாமக மற்றும் தேமுதிகவிற்கு இடையே, ஏழாம் பொருத்தம். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இவ்விரு கட்சிகளும் இருந்தன. அப்போது பாமக தொகுதிகளில் தேமுதிகவும், தேமுதிக தொகுதிகளில் பாமகவும் களப்பணியாற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
பாமக தொண்டர்கள் எரிச்சல்
நிலைமை இப்படி இருக்கும்போது, பாமகவுக்கு முதலில் தொகுதிகள் கொடுத்துவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் பேசி உள்ளது சிக்கலை அதிகரித்துள்ளது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தாலும், பாமக தொண்டர்கள் இந்த கட்சியின் வெற்றிக்கு களப்பணி ஆற்றுவார்களா என்பது என்ன நிச்சயம்? தேமுதிக வட மாவட்டங்களில் தான் ஓரளவுக்கு வாக்கு வங்கி வைத்துள்ளது. பாமகவும் அங்கு பலமாக உள்ளது. இவ்விரு கட்சிகளும் இணக்கமாக சென்றிருந்தால் இரு கட்சிகளுக்குமே அது ஆதாயமாக முடிந்து இருக்கும். ஆனால் பிரேமலதா அதற்கு மங்களம் பாடி விட்டார்.
ஜெயலலிதாவிற்கு இழுக்கு
மற்றொரு பக்கம் அதிமுகவையும் விட்டுவைக்கவில்லை பிரேமலதா. ஜெயலலிதா தலைமையில் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், இம்முறை ஆட்சியில் இருப்பதுமே தேமுதிகவால்தான் என்று கூறி ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமையை மிகவும் மலினமாக பேசிவிட்டார் பிரேமலதா. மேலும், ஆளும் கட்சியுடன் கூட்டணி இல்லாததால் அதிமுகவை சேர்ந்த 37 எம்பிக்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் பிரேமலதா.
தினகரனுக்கு அவல்
இப்படி ஜெயலலிதாவையும், அதிமுக எம்பி எம்பிகளையும் தாறுமாறாக விமர்சனம் செய்து விட்டு, அந்த கட்சியோடு ஒருவேளை தேமுதிக கூட்டணி அமைத்தால், அதிமுக தொண்டர்கள் எவ்வாறு தேமுதிகவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அது மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டசபையில் நாக்கை துருத்தியவர் கட்சியுடன் இப்போதைய அதிமுக தலைமை கூட்டணி வைத்துள்ளது.. இது ஜெயலலிதாவிற்கு இழைக்கப்படும் துரோகம் என்று தினகரன் தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்யக் கூடும். ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்க கூடிய பெருவாரியான அதிமுக தொண்டர்கள் மனநிலையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஓட்டு போச்சே
இப்படி எந்தப் பக்கம் போனாலும், தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த, கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் விட்டு விடலாமா என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர் அதிமுக தலைவர்கள். தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வரக்கூடிய வாக்குகளை விடவும், இழக்கப்போகும் வாக்குகள் தான் அதிகம் என்று எச்சரித்துள்ளது உளவுத்துறை. இதற்கு ஜெயலலிதா, விஜயகாந்த் நடுவேயான பழைய மோதலும், பிரேமலதாவின் இப்போதைய பேட்டியும்தான் மிக மிக முக்கிய பங்காற்றப்போகிறது என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.