எஸ்.வி சேகர் வீட்டுக்கு போன ஓபிஎஸ்! டெல்லிக்கு சொல்லி அனுப்பிய மெசேஜ்? படார்னு காலில் விழுந்து..!
சென்னை : சென்னையில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் 70 வயதை கடந்ததையொட்டி நேரில் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு , எஸ்வி சேகர் தாயார் காலில் ஓ பன்னீர்செல்வம் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். அப்போது சில முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
மழைவிட்டாலும் தூரல் விடவில்லை என்பது போல அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் தனது செல்வாக்கினை நிலை நிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்.
அதே நேரத்தில் தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி விட்டதாகவும் புதிய பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார்.
தேர்தல் ஆணைய கூட்டம்! எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பிற்கு போன கடிதம்.. செம ட்விஸ்ட்.. இன்று முக்கிய மீட்டிங்
குழப்பம்
தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் வருகை அதிமுகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதில் ஆர்வம் காட்டிய நிலையில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது குழப்பமாக உள்ளது. ஒரே நாளில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி இருப்பதால் இரு தரப்பினருமே அதிர்ச்சியில் உள்ளன. இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில் தான் ஓபிஎஸ்- எஸ்வி சேகரின் திடீர் சந்திப்பு அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.
எஸ்வி சேகர்
இந்நிலையில் எஸ்வி சேகர் 70 வயதை கடந்ததை ஒட்டி "பீமரத சாந்தி ஹோமம்" கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு தனிப்பட்ட முறையில் எஸ்.வி சேகரை ஓபிஎஸ் அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். எஸ்.வி. சேகர் 70 வயதை கடந்ததை ஒட்டி நேரில் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு பரிசு பெட்டகம் ஒன்றையும் ஓபிஎஸ் கொடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
பின்னர் எஸ்வி சேகர் தாயார் காலில் ஓ.பன்னீர்செல்வம் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அதிமுக பிளவு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. எஸ்வி சேகர் பாஜகவில் நேரடி அரசியலில் தற்போது இல்லை என்றாலும் தொடர்ந்து டெல்லியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளோடு தொடர்பில் இருக்கிறார்.
டெல்லிக்கு மெசேஜ்
இந்நிலையில் டெல்லி தரப்பின் ஆதரவை பெற இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ்- எஸ்வி சேகரின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் இருந்து தனக்கு அளிக்கப்படும் நெருக்கடிகள் குறித்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.