வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த "அம்மா"..!
பாஜகவின் வேல் யாத்திரை குறித்து அதிமுக விமர்சனம் செய்துள்ளது
சென்னை: ஓபனாகவே வெடித்து விட்டது சர்ச்சை.. அதிமுகவுக்கும் - பாஜகவுக்குமான கூட்டணி முறிவின் அச்சாரமா என்ற சந்தேகமும் இன்றைய அரசியலில் எழுந்து வருகிறது.
சில மாதமாகவே அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இணக்கமான சூழல் இல்லாமலேயே இருந்து வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் வேல்யாத்திரை விவகாரம் கிளம்பியது.
எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு தடை விதித்தது.. ஹைகோர்ட்டும் இதற்கு தடை சொன்னது.. எனினும் தடையை மீறி பாஜகவினர் யாத்திரைக்கு புறப்பட்டபோதே, இது அதிமுக கூட்டணிக்கு எதிரான செயலாக பார்க்கப்பட்டது.
திமுக - அதிமுக
எல்லாருக்கும் ஏன் பாஜகவின் வேல் யாத்திரை மீதே குறியாக இருக்கிறது என்று வானதி சீனிவாசன் கேட்டார்.. அதேபோல "திமுகவும் - அதிமுகவும் மறைமுக கூட்டு வைத்திருக்கின்றன" என்ற பாஜக தலைவர்களின் பேச்சும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
யாத்திரை
இதுபோன்ற சூழலில்தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"வில் இன்று பதில் தரப்பட்டுள்ளது.. "சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது... இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஆமென்
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். ஆமென் என்கிற கிறிஸ்துவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள். சாந்தமடை என்பதாகும். இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது" என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அதில் தெரிவித்துள்ளது.
ஷாக்
இதுகுறித்து ஒருசில நடுநிலைவாதிகளிடம் பேசினோம்.. அவர்கள் கூறியதாவது: "இப்படி ஒரு ஷாக்கை பாஜக எதிர்பார்த்திருக்காது.. அதேசமயம், அதிமுக 2 விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது.. ஒன்று, இந்துத்துவாவை யார் தூக்கி பிடித்தாலும், அது பலனளிக்காது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.. மற்றொன்று, பாஜக என்றாலே பயந்துவிடும் கட்சி அதிமுக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
பயம்
நேற்று முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமித்ஷாஜி இங்கு வருகிறார் என்றாலே, எல்லாரும் பயந்து கொள்கிறார்கள் என்றார்.. முருகன் யாரை சொன்னார் என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவை கண்டு அதிமுக கொஞ்சமும் பயப்படவில்லை என்பது மட்டும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, மத அரசியலை வைத்து எந்த கட்சி வாக்குகளை அள்ள நினைத்தாலும், அவைகளுக்கும் ஒரு எச்சரிக்கையை தந்துள்ளது அதிமுக!
மறைமுக உதவி
"வேல் யாத்திரைக்கு அதிமுக ஏன் அனுமதிக்க வேண்டும்? தடையை மீறி அவர்கள் யாத்திரை சென்றால், ஒரேடியாக பிடித்து கைது செய்து உள்ளே வைக்க வேண்டியதுதானே? அப்படியென்றால், பாஜகவை தமிழகத்தில் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கிறதா? மறைமுகமாக அக்கட்சிக்கு உதவுகிறதா " போன்ற பேச்சுக்களும் சமீப காலமாக எழத்தான் செய்தது.
அமித்ஷா
ஆனால், "பாஜகவின் பொம்மை அரசு அதிமுக" என்ற பெயர் தற்போது நொறுக்கி விடப்பட்டுள்ளது.. தேர்தல் சமயத்தில் அதிமுகவின் இந்த அதிரடி கட்டுரையானது செயல்பாடு மிகுந்த கவனத்தையும் மக்கள் முன்பு பெற்று வருகிறது.. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதுதான் அதிமுக என்பதும் நிரூபணமாகி உள்ளது.. இன்னும் அடுத்த சில தினங்களில் அமித்ஷா வர உள்ளார்.. எப்படியும் கூட்டணிக்கான பேரம் நடக்கும்.. அப்படி நடக்கும்போதுதான் அதிமுகவின் நிலைப்பாடு மேலும் வெளிப்படும்.. ஆனால், பாஜகவுடனான உறவு மெல்ல மெல்ல கரைந்து போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த அம்மா நாளிதழ் கட்டுரையே, பாஜகவுக்கு ஒரு சவுக்கடிதான்" என்றனர்.