9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிட்டது. கட்சியின் பொன்விழா காணும் அதிமுக இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தோல்வியை சந்தித்து சொற்ப இடங்களில்தான் வென்றுள்ளது.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி மாதம் எண்ணப்பட்டன.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட 3 காரணங்கள்! எப்போது சரியாகும்? சீனாவில் நடப்பது என்ன?
அப்போது மொத்தம் 514 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகளில் என்னதான் அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிக இடங்களைப் பெற்ற போதும் அதிமுகவும் கடும் போட்டியை கொடுத்திருந்தது. கணிசமான இடங்களைக் கைப்பற்றியது.
திமுக-அதிமுக சமநிலை
2019-ல் நடைபெற்ற 514 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 244; அதிமுக 214; பா.ம.க. 16; காங்கிரஸ் 15; சி.பி.ஐ- 7; பாஜக-7; தேமுதிக- 3; சி.பி.எம்- 2; த.மா.கா- 3; மற்றவை -22 என இடங்களைப் பெற்றிருந்தன. ஏறத்தாழ திமுகவும் அதிமுகவும் சமநிலையில் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
கவுரவமான இடங்கள்
5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலிலும் ஏறத்தாழ இதே சமபலம் தொடர்ந்தது. அத்தேர்தலில் திமுக 2095; அதிமுக 1792; பாமக 224 ;காங்கிரஸ் 133; தே.மு.தி.க 97; பா.ஜ.க 83; சி.பி.ஐ. 64; சிபி.எம். 33; த.மா.கா-23; இதர கட்சிகள்- 793 என முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் கூட அதிமுக கவுரவமான இடங்களைத்தான் பெற்றது எனலாம்.
9 மாவட்ட தேர்தல் முடிவுகள்
ஆக அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு, வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்பதையே இதுவரையிலான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் தற்போதைய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் இடங்கள் அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 120 இடங்களில் வென்றிருக்கிறது. அதிமுகவோ சிங்கிள் டிஜிட்டில் போராடுகிறது. 1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 190 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 17 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது.
கடும் பின்னடைவு ஏன்?
பொன்விழா ஆண்டு கொண்டாடும் அதிமுகவுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய பின்னடைவு. இதுவரை இப்படியான ஒரு தோல்வியை அதிமுக சந்தித்தது இல்லை என்றே சொல்லலாம். இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் பாமகவை தக்க வைக்காமல் அதிமுக கோட்டைவிட்டதும் இந்த பின்னடைவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லலாம். ஏனெனில் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் பாமக கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறது. அதனால் பாமகவை எப்படியாவது தக்க வைத்திருக்கலாம். அதிமுகவின் உட்கட்சி அரசியலில் பாமகவுடன் மல்லுக்கட்ட வேண்டிய எதிர்பாராத நிலை உருவானது. அதைத் தவிர்த்திருந்தால் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான இடங்களை நிச்சயம் அதிமுக பெற்றிருக்க முடியும்.
வியூகங்களை சரி ச்செய்ய வேண்டும்
அதேபோல் பாஜகவை பற்றி கவலைப்படாமல் முடிவெடுத்திருக்க வேண்டும். அல்லது கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில் தேமுதிகவை இழுத்துப் போட்டிருக்கலாம். அதிமுகவின் உட்கட்சி மோதல்கள், கூட்டணி வியூகங்களில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய தொய்வுகள் ஆகியவற்றை அதிமுக இனிவரும் காலத்திலாவது சரி செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது என்பதுதான் தொண்டர்களின் கருத்து.