நல்ல தூக்கம்.. திடீருன்னு கிருஷ்ண பரமாத்மா வந்தார்.. என்ன சொன்னார் தெரியுமா? நெகிழ்ந்த அகிலேஷ் யாதவ்
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைத்து ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவேன் என்று கடவுள் கிருஷ்ணர் தினமும் என்னுடைய கனவில் வந்து தெரிவிப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்கள், பிரதமர் மோடி வருகை என அரசியல் கனளில் சுழன்று கொண்டிருக்கிறது உத்தரப்பிரதேசம். பி.ஜே.பி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது.

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு பக்கம் சூறாவளி பிரசாரம் செய்கிறார். மற்றொருபுறம் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறார். மாநிலம் முழுதும் சுழன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அகிலேஷ் யாதவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைப்பதாக சமாஜ்வாடி கட்சித்தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அகிலேஷ் யாதவ் பி.ஜே.பி-க்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகிறார். முதல்வர் யோகி நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கிறார். தேர்தல் கூட்டணி அமைப்பதிலும் புதிய பாதை ஒன்றை உத்திரப்பிரதேச தேர்தலில் உருவாக்கும் எண்ணத்தோடு அகிலேஷ் செயல்பட்டு வருகிறார்.
எப்படியாவது பி.ஜே.பி-யை உத்திரப்பிரதேச ஆட்சியிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்று ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறார் அகிலேஷ். அதில் முக்கியமானது தேர்தல் வாக்குறுதி. சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் உ.பி-யில் உள்ள வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான 100 யூனிட் இலவச மின்சாரத்தை விடவும், உ.பி-யில் அகிலேஷ் கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதி அதிகமாகத் தெரிந்தாலும், ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அகிலேஷ் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். அதோடு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதையும் வாக்குறுதியில் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், அகிலேஷ் பி.ஜே.பியின் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். அதுதான் ராம ராஜ்ஜியம். ஆனால், பி.ஜே.ப்பி-யைவிட அகிலேஷ் ஒருபடி மேலேறி பேசியிருக்கிறார். அது, ''ராம ராஜ்ஜியத்திற்கான பாதை சமாஜ்வாத் பாதையில் உள்ளது. வரும் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி ஜெயித்தால் உத்திரப் பிரதேசத்தில் "ராம ராஜ்ஜியம்" அமைக்கப்படும். நாம் தான் உ.பி.யில் ஆட்சி அமைக்கப்போவதாகப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒவ்வொரு இரவும் என் கனவில் வந்து சொல்கிறார்''. மேலும் உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்றும் கனவில் கூறினார்.
அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்டுலேயே இல்லையே என சமாஜ்வாடி கட்சியினரே யோசிக்கும்போது, பி.ஜே.பி-யினர் வாயடைத்துப் போயிருப்பதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications