புகைப்பழக்கத்தை ஒழிக்க.. நியூசிலாந்து சட்டத்தை இந்தியா பின்பற்ற அன்புமணி கோரிக்கை
சென்னை: புகைப்பழக்கத்தை ஒழிக்க நியுசிலாந்து நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 1. நியுசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியுசிலாந்து தான்!
2. நியுசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறையும். 2050-ஆம் ஆண்டில் 40 வயதானவர்களால் கூட புகைக்க முடியாது. 2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நியுசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6000-லிருந்து 600 ஆக குறைக்கப்படும்!
3. புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியுசிலாந்து மக்களின் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும். ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விட முடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம்!
4. புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியுசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்!
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி பொறுப்பேற்றவுடன்தான் சிகரெட் பாக்கெட்டுகளில் புகைப்பிடித்தல் உடலநலனுக்கு கேடு விளைவிக்கும் என்ற ஒரு வாசகத்தை இடம் பெற செய்தார். அது போல் மது பாட்டில்களிலும் குடிப்பழக்கம் உடலுக்கு கேடு என்றும் எழுதி வைக்கும் நடைமுறையை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.