பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியை இலக்காக கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வருகிற 30-ம் தேதி தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொள்கிறார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..!
9 மாவட்டங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, தென்காசி என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 மாவட்டங்களில் வெற்றியை இலக்காக தீர்மாணித்து அந்த மாவட்டங்களில் முழு கவனத்தை திருப்பியிருக்கிறது பாமக தலைமை. நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் பயணம் மேற்கொள்ளவில்லை.
பிரச்சார விவரம்
வரும் 30-ம் தேதியன்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதேபோல் அக்டோபர் 1-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களில் வாக்கு சேகரிக்கும் அவர் அக்டோபர் 2-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்.
தனித்து போட்டி
அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தல் மூலம் கட்சியின் பலம் மற்றும் பலவீனத்தை சோதனை செய்து கொள்ள முயற்சிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பாமகவை சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்தால் தான் அது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வலிமை சேர்க்கும் எனக் கருதும் ராமதாஸ் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் 5 மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
பாமக எம்.எல்.ஏ.க்கள்
இதனிடையே அன்புமணி ராமதாஸ் மட்டுமல்லாமல் பாமகவை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும் 5 மாவட்டங்களில் பொறுப்பை ஏற்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை, குறிப்பாக அதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் உள்ளடங்குவதால் தேர்தல் வெற்றியை கவுரவ பிரச்சனையாக கருதுகிறது பாமக தலைமை.