நியாயமே இல்ல.. ஏன் இந்த அவசரம்? மக்களுக்கு மன உளைச்சல்! ஆதார்-மின் இணைப்பு பற்றி அன்புமணி கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு வழிகளில் மானிய விலையில் மின் விநியோகத்தை அரசு செய்து வருகிறது.

ஆதார் - மின் எண் இணைப்பு
இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அண்மையில் புதிய உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக மின் இணைப்புதாரர்களுக்கு SMS அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது போன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

செந்தில்பாலாஜி பேட்டி
இதுகுறித்து பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது நிர்வாக ரீதியாக நடப்பதாகும். இலவச மின்சார விநியோகத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது எப்போதும்போல் தொடரும். இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

மின் கட்டணம்
மின் உற்பத்தி, மின் கொள்முதல் மற்றும் மின் விநியோகம், மின்சார கட்டணம் குறித்த தரவுகளை பெறுவதற்கான பணிகளின் ஒரு பகுதிதான் இந்த ஆதார் எண் இணைப்பாகும். இதற்கு முன்பாக 1.15 கோடி மின் நுகர்வோர் தரவுகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது இரட்டிப்பாகி 3 கோடிக்கும் மேலான மின் நுகர்வோர் தரவுகளை திரட்டி உள்ளோம்." என்று தெரிவித்தார்.

அன்புமணி ட்வீட்
இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அவகாசம் வேண்டும்
மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது.

நியாயம் இல்லை
ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல.

நிபந்தனையை நீக்க வேண்டும்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

மின்வாரிய ஊழியர்கள்
ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications