ஆமா.. அது ஏன் பென்னாத்தூரில் ஆசிரமம்.. பெண் சாமியார் அன்னபூரணி சொன்ன அடடே காரணம்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரில் இடம் வாங்கி ஆசிரமம் அமைப்பது ஏன் என்பது குறித்து அன்னபூரணி அரசு தெரிவித்துள்ளார்.
திடீர் திடீர் என முளைக்கும் சாமியார்களுக்கு இங்கு பஞ்சமில்லை. அப்படி திடீரென முளைத்தவர்தான் அன்னபூரணி அரசு. இவரை டிவியில் பார்த்ததும் மக்கள் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என தங்கள் மெமரியில் சேவ் செய்துள்ள பதிவுகளை ரீவைண்ட் செய்தனர்.
அப்போதுதான் தெரிந்தது, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கணவர், 14 வயது மகளை விட்டுவிட்டு அரசு என்ற அடுத்த பெண்ணின் கணவருடன் காதல் வயப்பட்டார்.

கணவருடன் பிரிவு
இதையடுத்து தனது கணவரை பிரிந்து அரசுவுடன் குடித்தனம் நடத்தியது குறித்து நியாயம் கேட்க அரசுவின் மனைவி சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சியில் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் விசாரித்தார். அப்போது லட்சுமி எத்தனையோ அறிவுறுத்தியும் தனக்கு அரசுதான் வேண்டும் என்றார்.

7 ஆண்டுகள்
இதையடுத்து 7 ஆண்டுகளாக அன்னபூரணி என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என தெரியாத நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியுலகிற்கு வந்த அன்னபூரணி, சாதாரண பெண்ணாக வராமல் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு மாடர்ன் சாமியார் வேடத்தில் வந்தார்.

புதிய ஆசிரமம்
அவர் திவ்ய தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அது அனுமதியின்றி நடத்தப்படுவதாக போலீஸார் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து சமூகவலைதளங்களில் சொற்பொழிவு நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவர் ஆசிரமம் கட்ட இடம் வாங்கி உள்ளார்.

சென்னையில் முடியவில்லை
இதற்கான பூமி பூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அன்னபூரணி தனது பக்தர்களுடன் வருகை தந்தார். அப்போது பக்தர்களிடம் அன்னபூரணி பேசுகையில் என்னுடைய பட்ஜெட்டிற்கு சென்னையில் இடத்தை வாங்க முடியாது. அதனால்தான் இந்த இடத்தில் இடம் வாங்கி ஆசிரமம் அமைக்கவுள்ளேன்.

அருள்வாக்கு இல்லை
நான் அருள்வாக்கு சொல்வதில்லை. ஆன்மீகத்தை சொல்லி கொடுத்து வருகிறேன். நான் உங்களுடைய தாய். எந்த பிரச்சினை இருந்தாலும் என்ன குறைகள் இருந்தாலும் எதற்குமே கவலைப்படாதீர்கள். நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று மேலே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் எந்த பிரச்சினையை கண்டும் பயப்படாதீர்கள். எந்த பிரச்சினை இருந்தாலும் என்னிடம் வாங்க, உங்கள் எல்லாருக்குமே சந்தோஷமான கொண்டாட்டமான வாழ்க்கையை வாழ முக்தி நிலையில் நிலைபெற வைக்க தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications