"மச்சக்காரர்" யார்.. அடுத்தடுத்த 2 கடிதம்.. அதிமுகவில் புயல்.. மீண்டும் எடப்பாடி? ஓங்குதா ஓபிஎஸ் கை?
ஓபிஎஸ்ஸின் கை ஓங்குகிறதா என்ற சந்தேகம் மீண்டும் களத்தில் எழுந்துள்ளது
சென்னை: பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எழுதியுள்ள கடிதம் பரபரப்பையும், சில விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.
ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அறியும் வகையில், அவருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.. மத்திய அரசின் சட்ட ஆணையம் எழுதியிருந்த இந்த கடிதத்தில், எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் என்று பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழை, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த நிலையில், அதில், இடைக்கால பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தாய் மறைவு.. தனித்தனி விமானத்தில் குஜராத் விரையும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்!
லெட்டர்
டெல்லியில் இருந்தே இப்படியான ஒரு கடிதம் வந்ததையடுத்து, எடப்பாடி தரப்பு குஷியாகி உள்ளது.. ஏற்கனவே, இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் தங்கள் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தது.. இதை கேள்விப்பட்டு ஓபிஎஸ் தரப்பு வருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.. இப்போது, அடுத்ததாக, இப்படி ஒரு அங்கீகாரத்தை மத்திய அரசு தந்துள்ளது, மறுபடியும் ஓபிஎஸ் தரப்பை அதிருப்தி அடையசெய்துள்ளது..சுப்ரீம்கோர்ட்டில் இன்னும் தீர்ப்பு எதுவும் வராத நிலையில், தேர்தல் ஆணையம், எடப்பாடி அங்கீகரித்து விட்டதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் இப்போது லெட்டர் வந்துள்ளது..
கிளம்பிய டவுட்
இதனிடையே, தமிழக தேர்தல் அதிகாரி எழுதிய கடிதம் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கவே இல்லை.. அதனால், அவர்கள் வாக்களிக்கும் வகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.... இதற்காக இந்திய தேர்தல் ஆணையம், நாட்டில் உள்ள 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதான் சாஹூ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
காலாவதியா
அந்த கடிதத்தில் 5 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... அதில் அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பாமக ஆகிய 5 கட்சிகளும் பங்கேற்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.. இதில் அதிமுகவை பொறுத்தவரை, "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்" ஆகிய இருவருமே இந்த செயல்முறை விளக்க கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று பிரத்யேகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதுதான் மறுபடியும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கெனவே அதிமுகவில் இந்த 2 பதவிகளும் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி பலமுறை சொல்லி விட்டார்..
குஷி சந்தோஷம்
அத்துடன், தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டும் வருகிறார்.. ஒருபடிமேலே போய், பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு அவரை குறிப்பிட்டு கடிதமும் அனுப்பியிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அங்கீகரிக்கும் வகையில் இந்த கடிதத்தினை வழங்கியுள்ளது... இந்த கடிதமானது, எடப்பாடி பழனிசாமிக்கான சறுக்கலாக பார்க்கப்பட்டு வருகிறது.. நேற்றுதான், மத்திய அரசின் கடிதம் வந்ததற்கு, எடப்பாடி தரப்பில் குஷியில் இருந்தார்கள்.. இப்போது, மறுபடியும் சோகமும், குழப்பம் அடைந்துள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர்
ஆனால், ஓபிஎஸ் தரப்போ, இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது.. பண்ருட்டி ராமச்சந்திரனை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருகிறார்.. அதாவது, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விட்டுத்தந்துவிட்டார்.. அப்படியானால் மிச்சமிருப்பது "ஒருங்கிணைப்பாளர்" என்ற பதவி மட்டுமே.. எனவே, கட்சி இப்போதுவரை தங்களிடம்தான் உள்ளது, அனைத்துமே முறைப்படிதான் நடக்கிறது என்பதுதான் பண்ருட்டியாரின் பெருத்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.
2 கடிதங்கள்
அதுமட்டுமல்ல, கடந்த வாரம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தாக்கல் செய்த அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பதிவேற்றியிருந்தது.. அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், வரவு செலவு அறிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியிருந்தது எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகமும் அடைந்தன.. இது ஓபிஎஸ்ஸூக்கு மிகுந்த வருத்தத்தையும், குழப்பத்தையும், ஏற்படுத்தியது.. அதனால், நேரடியாகவே இதுகுறித்து பண்ருட்டியாரிடம் சந்தேகம் கேட்டுள்ளார் ஓபிஎஸ்..
ரூட் கிளியர்
இப்படி வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதால், எடப்பாடி தரப்புக்கு என்ன நன்மை? என்று வெளிப்படையாகவே பண்ருட்டியாரிடம் கேட்டாராம் ஓபிஎஸ்.. அதற்கு பண்ருட்டியார், "பொதுக்குழு முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்கக்கூடாது என்று உங்கள் (ஓபிஎஸ்) தரப்பில் ஆட்சேபனை செய்யப்பட்டதால், அந்த விவகாரம் கிடப்பில் வைத்து விட்டது தேர்தல் ஆணையம்... ஆனால், வரவு செலவு தாக்கல் அப்படி கிடையாது.. அவர்கள் தாக்கல் செய்ததை உங்கள் தரப்பில் ஆட்சேபனை செய்யாததால் அதனை இணையத்தளத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.. இதைத் தாண்டி எந்த முக்கியத்துவமும் அதற்கு இருக்கப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினாராம் பண்ருட்டி.
மாறி மாறி
பண்ருட்டியாரின் அட்வைஸும், நம்பிக்கையும் ஓபிஎஸ்ஸுக்கு பலத்தை தந்து வந்தாலும், இன்றைய தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எழுதிய கடிதம் மேலும் தெம்பை ஊட்டி வருகிறது.. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகத்தை தரும்படி ஒரு கடிதமும், மறுபக்கம் ஓபிஎஸ்ஸுக்கு உற்சாகத்தை தரும்படி இன்னொரு கடிதமும் மாறி மாறி வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்துவதுடன், குழப்பத்தையும் சேர்த்தே ஏற்படுத்தி வருகின்றன.. எடப்பாடி + ஓபிஎஸ் இருவருமே தங்களுக்கு தேவை என்பதைதான் மேலிடம் இப்படி லட்டர்கள் மூலம் உணர்த்துகிறதோ??? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!
ஒரே போடு
அதுமட்டுமல்ல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தில் உள்ளன என்பது இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.. இந்த கடிதத்தினால் ஓபிஎஸ்ஸுக்கு பிளஸ் என்றாலும், அவரது ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணசாமி, இன்னொரு பாயிண்ட்டை எடுத்துரைத்துள்ளார்.. "எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுக அலுவலகத்தை கள்ள சாவி போட்டு அலுவலகத்தை திறந்து உள்ளனர்... சுப்ரீம்கோர்ட் நிலுவையில் உள்ள நிலையில் இறுதி தீர்ப்பு வந்ததும் அதிமுக அலுவலகம் செல்வோம், ஆனால், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்லக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பதவிக்காலம் காலாவதி ஆகிவிட்டது, அத்துடன் அவர் இப்போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இல்லை என்றும் ஒரே போடாக போட்டு, இன்னொரு ஷாக் தந்துள்ளார். எனினும், பாஜக மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும், "இரட்டை தலைமையை"தேர்தல் ஆணையமும் வலியுறுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.