ஓடி ஓளியும் ராஜேந்திர பாலாஜி... விடாது விரட்டும் தனிப்படை.. எங்கே இருக்கிறார்? வெளியான புது தகவல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
சென்னை: அமைச்சராக இருந்த போது தினசரி எதையாவது பேசி ஊடக செய்தியில் இடம் பிடித்து விடுவார் ராஜேந்திர பாலாஜி. இப்போது கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார். ஓடி ஒளிந்து வரும் ராஜேந்திரபாலஜியை பிடிக்க தனிப்படை போலீசார் விடாது விரட்டி வருகின்றனர். அவர் டெல்லியில் பதுக்கியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதை அடுத்து தனிப்படை காவல்துறையினரும் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்த கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 13 நாட்களாக தேடி வருகிறது.

உறவினர்களிடம் விசாரணை
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்தனர்.

விரையும் தனிப்படை
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெய்யில் முறைகேடு
கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 நாட்களாக மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்குவாரா ராஜேந்திர பாலாஜி
கைதாகி விடக்கூடாது என்பதற்காக ஊர் ஊராக ஓடி ஒளிந்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி. அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று விடாமல் தனிப்படை போலீசார் விரட்டி வருகின்றனர். சிக்குவாரா ராஜேந்திர பாலாஜி. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications