விஜய்யின் தவெக மாநாடு எப்போது? முடிவு ‘அவர்கள்’ கையில்..புலம்பித் தவிக்கும் நண்பாஸ்! என்ன பிரச்சினை?
சென்னை: ஒரு பக்கம் நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள 'கோட்' படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றனர். இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற பரிதவிப்பில் இருக்கின்றனர் நிர்வாகிகள். இந்த நிலையில் இரு காவல்துறை அதிகாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் மாநாடு தொடர்பான இறுதி அறிவிப்பு இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்..
தமிழகத்தில் இருக்கும் நடிகர்களில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவரது இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

அதே நேரத்தில் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார் விஜய். கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் படம் வெளியாகும் போது பல சிக்கல்களும் சர்ச்சைகளும் எழுவதும் வழக்கம்தான். அதேபோல்தான் அரசியல் கட்சி ஆரம்பித்த போதும் விஜயை சர்ச்சை வளையங்கள் சூழ்ந்து இருக்கிறது.
கட்சியின் கொடி வெளியீட்டின் போதே பல பிரச்சனைகளை சந்தித்த அவர், தற்போது தேர்தல் ஆணையத்திற்கு பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் மாநாடு தொடர்பான அறிவிப்பும் நிர்வாகிகளை பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. வரும் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
மாநாட்டுக்கு இன்னும் 20 நாள்தான் இருக்கிறது.. அதற்குள்ளாக தமிழகம் முழுவதும் மாநாடு தொடர்பான அறிவிப்பை கொண்டு செல்ல வேண்டும், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர்கள் என தமிழக முழுவதும் பல வேலைகள் இருக்கிறது. அதே நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள் என்றால் அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்க வேண்டும், மாநாடு அரங்குகள், இருக்கைகள், உணவு, கழிப்பிடம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என தலைக்கு மேல் வேலை இருக்கிறது.
ஆனால் இதுவரை மாநாடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல்துறையில் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மாநாட்டுக்கு யார் யார் வருவார்கள்? எத்தனை இருக்கைகள் அமைக்கப்பட இருக்கிறது? என்பது தொடர்பான 21 கேள்விகளை கேட்டு விழுப்புரம் காவல்துறை தமிழக வெற்றி கழகத்தில் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
இந்த கடிதத்திற்கு பதில் அளிக்கவே இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த கடிதத்தை பெற்ற காவல் துறையினர் விளக்கங்கள் திருப்தியாக இருந்தால் மட்டுமே அனுமதி அளிப்பார்கள். அப்படி அனுமதி அளிப்பதற்கு மேலும் ஒரு வார கால அவகாசம் ஏற்படும். இப்படியாக இதிலேயே பத்து முதல் 15 நாட்கள் கழிந்து விடும் என்பதால் 23ஆம் தேதிக்கு முன்னதாக மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மிகவும் சிரமம் என்கின்றனர்.
கோட் படத்தை கொண்டாடத் தயாராகி வரும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் மாநாடு தொடர்பான வேலைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக காவல்துறை அனுமதி அளித்தால்தான் மாநாடு தொடர்பாக இறுதி கட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை மட்டும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது. காரணம் ஏற்கனவே விஜயகாந்த் மாநாடு நடத்திய போது உளுந்தூர்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் காவல்துறையினர் மனதில் வைத்திருக்கின்றனர்.
தற்போது மாநாடு நடத்தும் இடம் விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு மிக அருகில் இருக்கிறது. எனவே மாநாட்டின் போது அப்பகுதியில் நிச்சயம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மாற்று வழியில் வாகனங்களை இயக்க கூட அங்கு சாலை வசதி இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படியாக பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர், இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கூடுதல் டிஜிபி டேவிட்சன் டேவாசீர்வாதத்தின் அனுமதியை பெறவேண்டும்.
விஜய் கட்சியின் நிர்வாகிகள் அளிக்கும் அறிக்கை திருப்தியாக இருந்தால் மட்டுமே மாநாடு தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியும். ஒரு வேளை அறிக்கை திருப்தியாக இல்லை என்றால் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படும். இதனால் வேறு தேதிக்கு மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதே நேரத்தில் இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் ஜனவரிக்குப் பிறகு மாநாடை நடத்த வேண்டி வரும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். கோட் படத்தில் சர்ப்ரைஸ் நிறைய காத்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருப்பது போல மாநாட்டிலும் பல சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்கின்றனர் அந்த கட்சியினர்.












Click it and Unblock the Notifications