காசிக்கு விசிட் அடித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்! எதற்காக இந்த பயணம்? பின்னணி என்ன?
சென்னை: செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் காசிக்கு சென்றிருக்கிறார்.
ஆன்மிகப் பயணமாக இல்லாமல் அரசு முறை பயணமாக அவர் காசிக்கு சென்றிருக்கிறார் என்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம்.
அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுடன் செய்தி மற்றும் விளம்பத்துறை உயர் அதிகாரிகளும் காசிக்கு சென்றிருக்கிறார்கள்.

அமைச்சர் சாமிநாதன்
தமிழக அரசு சார்பில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் சீரமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு பாரதியாரின் மார்பளவு சிலை ஒன்றும் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தையும், சிலையையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனிடையே இந்த விழாவில் நேரடியாக கலந்துகொள்ளும் வகையில் காசி புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் சாமிநாதன்.

பாரதியார் நினைவு இல்லம்
காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரதியார் மறைந்த நூற்றாண்டு நிறைவை ஒட்டி இப்போது அந்த இல்லம் சீரமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாரதியார் குடும்ப உறவினர்கள் பலரும் தமிழகத்திலிருந்து காசிக்கு சென்றிருக்கின்றனர்.

சிறப்பு மலர்
இதனிடையே பாரதியார் மறைந்த நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் அவர் குறித்த சிறப்பு மலரும் இன்று வெளியிடப்படுகிறது. அதனையும் காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடந்த ஓராண்டாக சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தி அவரது பெருமைகள் பற்றி பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பாரதியாருக்கு சிறப்பு
மகாகவிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்றிரவே அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications