மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் , ரோசய்யா, புனித் ராஜ்குமாருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்!
தமிழக சட்டசபையில் இரண்டாம் நாளான இன்று மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ அலுவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் இன்றும் நாளையும் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அவை கூடிய உடன் மறைந்த முக்கிய தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் டாக்டர் கோ. ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குரூப் கேப்டன் வருண் சிங் மற்றும் 11 இராணுவ உயர் அலுவலர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
வே. துரைமாணிக்கம் மறைவுக்கும், பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஆகியோரின் மறைவுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து கேள்வி நேரம் இன்று நேரலையாக ஒளிபரப்பானது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.












Click it and Unblock the Notifications