திமுகவின் தொடர்பில் 2 பாஜ எம்எல்ஏக்கள்! தலைமை தலையசைத்தால் தட்டி தூக்குவோம்! செந்தில்குமார் எம்பி
சென்னை: ‛‛திமுகவின் தொடர்பில் 2 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் திமுகவுக்கு தூக்கிவிடுவோம்'' என தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் திருச்சி சிவா. மாநிலங்களவை எம்பியான இவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் உள்ளார்.
இவரது மகன் சூர்யா சிவா. திமுகவில் செயல்பட்டு வந்த சூர்யா சிவா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பாஜகவில் திருச்சி சிவா மகன்
இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் எப்போது இணைவார் என்பதில் கேள்வி நீடித்தது. இந்நிலையில் நேற்று இரவு சூர்யா சிவா, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்ததை தொடர்ந்து அவருக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

குடும்ப கட்சி என குற்றச்சாட்டு
இதையடுத்து சூர்யா சிவா கூறுகையில், ‛‛திமுக குடும்பத்தின் கட்சியாக உள்ளது. ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்றார். தந்தை திருச்சி சிவாவின் எதிர்ப்பையும் மீறி சூர்யா சிவா பாஜகவில் இணைந்துள்ளார். திமுகவின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகனை கட்சிக்கு இழுத்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

2 எம்எல்ஏக்கள் தொடர்பு
இந்நிலையில் தான் தர்மபுரி மக்களவை தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ‛ஆக்டிவ்'வாக உள்ள இவர் பாஜகவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 2 பாஜக எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளதாக செந்தில்குமார் எம்பி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது தொடர்பான பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

இசைவு தெரிவித்தால் தூக்கிடுவோம்
‛‛திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவினருக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications