#Exclusive கார்ப்பரேட் அரசியல்.. பணம் தர்றவங்களை எப்படி எதிர்ப்பார் ஆளுநர்? - ஆளூர் ஷாநவாஸ் அட்டாக்!
சென்னை : கார்ப்பரேட்களால் வாழும் பாஜக, கார்ப்பரேட்டுக்கு எதிரான ஒரு சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ளும்? அதனால் தான் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் எனக் குற்றம்சாட்டி உள்ளார் விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ். நமது 'ஒன் இந்தியா அரசியல்' சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆளுநரின் அரசியலை விலாவரியாகப் பேசியுள்ளார் ஆளூர் ஷாநவாஸ்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆளுநர் ரவி, இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததற்குக் காரணம், கார்ப்பரேட்டுகளுக்கு விரோதமாக பாஜக செயல்பட விரும்பாததால் தான் என எதிக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ், நமது'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசிய முக்கிய விவரங்கள் வருமாறு:
Fact check: சரத்துக்கு பதிலாக ஆளுநர் முகம்.. போட்டோஷாப்! ஆன்லைன் ரம்மி விளம்பரம் - உண்மை என்ன?
பெரிய கொம்பன்களையே பார்த்துவிட்டோம்
"ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடைமையை செய்யத் தவறி இருக்கிறார். ஆர்.என்.ரவியை விட பெரிய பெரிய கொம்பன்களை எல்லாம் பார்த்தது தமிழ்நாடு. அதனால், ஆளுநரை எதிர்கொள்வது பெரிய விஷயம் கிடையாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை விட பெரிய வேலை என்ன இருக்கிறது? சனாதானத்தை பரப்பும் வேலையா அரசியலமைப்புச் சட்டத்தால் அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக செயல்படவா ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கிறார்? அவர் ஆன்லைன் சூதாட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்ட சில மணி நேரங்களில் அரசு அதனை தெளிவுபடுத்தி அனுப்பிவிட்டது.
தமிழ்நாட்டுக்கே எதிர்ப்பு
ஆளுநருக்கு தனிப்பட்ட அஜெண்டா இருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மட்டுமல்லாது பல மசோதாக்களை கிடப்பில் போட்டிருக்கிறார். தமிழ் வழி கற்போருக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதாவை மாநில அரசு தாக்கல் செய்தால், அதற்கு முன்னுரிமை அளிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு காசி தமிழ் சங்கமம் நடத்துவதில் தான் குறியாக இருக்கிறார். அன்புமணி, டிடிவி தினகரன் போன்றோரும் கூட ஆளுநர் செய்வது சரியில்லை என்று சொல்கிறார்களே.. ஆளுநர் என்பவர் திமுக எதிர்ப்பு என்று சுருக்கிப் பார்க்க முடியாது, அவர் தமிழ்நாட்டுக்கே எதிர்ப்பாக இருக்கிறார்.
ஆளுநர் vs தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திமுக எனும் கட்சியின் முடிவு அல்ல, தமிழ்நாடு சட்டமன்றத்தின் முடிவு. தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றைக் குரலாக நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் இழுத்தடிக்கிறார் என்றால் அவர் யாரை பழிவாங்குகிறார்? தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும், தமிழக மக்களையும் பழிவாங்குகிறார். ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. பாஜக + ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் என்பது சனாதன அரசியலும், கார்ப்பரேட் அரசியலும் தான். இரண்டையும் தண்டவாளத்தின் இரு வழித்தடங்களைப் போல பார்க்கிறார்கள்.
கார்ப்பரேட் பணத்தில் கொழுக்கும் பாஜக
ஆன்லைன் ரம்மி என்பது கார்ப்பரேட் தொடர்புடையதாக இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களால் இந்தியா முழுவதும் தானே பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரலாமே? ஏன் அவர்கள் செய்யவில்லை? கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் பணத்தில் கொழுத்துச் செழித்திருக்கிறது பாஜக. பல்லாயிரம் கோடி ரூபாய் அவர்களுக்கு கார்ப்பரேட் மூலம் வந்து குவிகிறது. அதனால் தான் இன்று அவர்கள் நினைப்பதையெல்லாம் செய்ய முடிகிறது. கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத இடங்களில் எல்லாம் ஆட்சியைப் பிடிக்கிறார்களே. கட்சி கட்டமைப்புக்கு பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என நடத்தி படிப்படியாக வளரும் முறை அன்றி, நேரடியாக ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்றால் அப்படி?
ஜீ பூம்பா
அப்படி எந்த கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தோற்றுப்போன உங்களுக்குப் பின்னால் எம்.எல்.ஏக்கள் ஓடி வருகிறார்கள்? அவ்வளவு ஈர்ப்பு என்றால் மக்களே உங்களுக்கு வாக்களித்திருப்பார்களே.. மக்கள் நிராகரித்த இடத்திலேயே நீங்கள் ஆட்சிக்கு வருகிறீர்கள், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகுறீர்கள் என்றால், எப்படி இது 'ஜீ பூம்பா' போல நடக்கிறது? இதற்கு பின்னால் என்ன நடக்கிறது? எம்.எல்.ஏக்கள் திடீரென ஓர் இரவில் கட்சி மாறி, நீங்கள் ஆட்சியைப் பிடிக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணமான பணம் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது? பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்று வேறு சொல்லிக் கொள்கிறது. எனில் எப்படி இது நடக்கிறது.
இதனால் தான் மறுக்கிறார்
அந்தப் பணத்தை தருவது கார்ப்பரேட் நிறுவனங்கள். கார்ப்பரேட் வலைப் பின்னலில் தான் இதெல்லாம் நடக்கிறது. பாஜக இன்று நினைத்ததைச் செய்வதற்குக் காரணம் கார்ப்பரேட் தரும் பணத்தை வைத்துத்தான். கார்ப்பரேட்களால் வாழும் ஒரு கட்சி, கார்ப்பரேட்டுக்கு எதிரான ஒரு சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ளும்? அதனால் தான் பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.
அண்ணாமலையே முக்கியம்
தமிழ்நாட்டு சட்டமன்றத்தை மதிப்பதை விட, தமிழக முதல்வருக்கோ தமிழக மக்களுக்கோ மரியாதை கொடுப்பதை விட தமிழக ஆளுநருக்கு அண்ணாமலை தான் முக்கியமானவராக இருக்கிறார். ஆளுநருக்கு கமலாலயமும், சனாதனமும், ஆர்.எஸ்.எஸ்ஸும் முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் அண்ணாமலையை சந்திக்கும் ஆளுநர், அமைச்சர் சந்திக்க நேரம் கேட்டும் மறுத்தார், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். ஆளுநர் விளக்கம் கேட்டும், சில மணி நேரத்தில் தமிழக அரசு உடனே விளக்கம் அளித்தும், ஒப்புதல் அளிக்காமல் அவசர சட்டம் காலாவதி ஆக விட்டுவிட்டார் ஆளுநர்.