2024 க்குள் சசிகலா, டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ்ஸை பாஜக இணைக்கும்.. மூத்த பத்திரிகையாளர் கருத்து
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை பாஜக இணைக்கும் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2024 ஆம் ஆண்டுக்குள் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எடப்பாடியின் கணக்காகும். பாஜக நினைப்பது என்னவெனில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை ஏற்படக் கூடாது.
அவ்வாறு வந்தால் தாங்கள் நினைத்தபடி அவர்களை ஆட்டுவிக்க முடியாது என கருதுகிறார்கள். குழப்பமான இரட்டை தலைமை இருந்தால் நாம் அவர்களை எளிதில் கையாள முடியும் என கருதுகிறார்கள். இதனால்தான் சசிகலாவை எதிர்த்தார்கள். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையானதை பாஜக விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸோடு அனுசரித்து அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள்.
“டபுள் கேம்” - ஓபிஎஸின் “அடிமடியிலேயே அடி”! தகர்ந்த கணிப்புகள் - டுவிஸ்ட் வைத்த சசிகலா, தினகரன்
பஞ்சாயத்து
இந்த நேரத்தில் பஞ்சாயத்து செய்யக் கூடாது என்பதால்தான் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியை சந்திக்க விரும்பவில்லை. எடப்பாடியை சந்தித்தால் அடுத்து ஓபிஎஸ்ஸை சந்திக்க வேண்டும். இருவரும் மாறி மாறி புகார் செய்வார்கள் என்பதால் தவிர்ப்பது நல்லது என முடிவு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டுதான் தேர்தல், அந்த நேரத்திற்குள் அதிமுகவே அழிந்தாலும் பரவாயில்லை, அந்த நேரத்தில் நாங்கள் பாஜகவை வளர்த்துக் கொள்வோம் என்ற திட்டமும் பாஜகவிடம் உள்ளது. அப்படியே பாஜகவால் தமிழகத்தில் வெல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை ஒன்று சேர்த்து இரட்டை இலை வாக்குகளை அறுவடை செய்யும் வாய்ப்பு பாஜகவுக்கு இருக்கிறது.
பாஜக
2024 ஆம் ஆண்டுக்குள் பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது சசிகலா, தினகரன் மட்டுமில்லை, ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய 4 பேர் இணைந்தால் மட்டுமே இரட்டை இலை வாக்குகளை அறுவடை செய்து நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்ற நிபந்தனையை வைப்பார்கள். பாஜகவின் கணக்கு என்னவென்றால் இரட்டை இலைக்கு என இருக்கும் வாக்கு வங்கியை நாம் விட்டுவிடக் கூடாது என்பதுதான்.
எடப்பாடி பழனிசாமி
இந்த வாக்கு வங்கி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இருந்தால் மட்டும் கிடைக்காது. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால்தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு என மவுசு இருந்தாலும் புலனாய்வு துறை விசாரணைக்காக இந்த தரப்பினர் சற்று தயக்கம் காட்டி பாஜகவின் இழுப்புக்கெல்லாம் செல்வர். இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தும் இதுவரை அமலாக்கத் துறை விசாரணை நடத்தவில்லையே ஏன்?
Recommended Video
குட்கா விவகாரம்
ஏற்கெனவே குட்கா விவகாரம், நெடுஞ்சாலைத் துறை மோசடி உள்ளிட்ட விவகாரங்களை புலனாய்வு துறை கையில் எடுத்துள்ளது. அடுத்தது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கையில் எடுப்பார்கள். இதனால் பாஜகவை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது. பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமியும் தேவையில்லை, ஓபிஎஸ்ஸும் தேவையில்லை. இரட்டை இலை இருந்தால் போதுமானது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாங்கள் இழந்துவிட்டோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மதங்கள், ஜாதியை கடந்த கட்சியாக அதிமுக இருந்தது. இன்று அப்படியில்லை. எதிர்க்கட்சியானது மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். எனவே பாஜகவுடன் எந்த விதத்திலும் அனுசரனையாக இருக்கக் கூடாது என்பதே தொண்டர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். ஆனால் அதிமுக தலைவர்களோ, நிர்வாகிகளோ அப்படி நினைக்க மாட்டார்கள். தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் இணக்கமாகவே இருப்பார்கள் என ப்ரியன் தெரிவித்தார்.