பொன்னியின் செல்வன் “ஃபீவர்”.. சோழ நாடு VS பாண்டிய நாடு! தமிழ்நாட்டை துண்டாட தூண்டும் பிரிவினைவாதிகள்
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில் அதில் வரும் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இடையேயான மோதலை வைத்து சமூக வலைதளங்களில் சில தமிழ்நாடு பிரிவினையை தூண்டி பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சத்யராஜ், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட கல்கி எழுதிய புனைவு கதையான பொன்னியின் செல்வன் தமிழில் வெளியான நாவல்களில் பலராலும் விரும்பப்பட்ட ஒன்றாகும். எம்.ஜி.ஆர். படமாக்க விரும்பி முடியாமல்போன நிலையில் அதை மணிரத்னம் செய்திருக்கிறார்.

தமிழனுக்கு பெருமை
இந்த படத்தின் தயாரிப்பு தொடங்கியதில் இருந்து படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள் வரை இயக்குநர், படத்தில் நாயகர்கள் என அனைவரும் இதை தமிழ் வரலாற்றின் பெருமை என்றும் தமிழ் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் எனவும் கூறி போற்றினர். படமும் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதே நேரம் பொன்னியின் செல்வம் திரைப்படம் விவாதத்தையும் எழுப்பி இருக்கிறது.

சமூக வலைதள விவாதம்
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் இது சோழர்கள் பாண்டியர்களுக்கு இடையிலான சண்டை என்பதை உணர்ந்தே படத்துக்கு சென்றனர். ஆனால், அந்த நாவலை வாசிக்காமல் படத்தை பார்க்க சென்றவர்கள் இதில் பாண்டியர்களை எதிரிகளாக காட்டி இருப்பதை எதிர்பார்க்கவில்லை. இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சோழ நாடு, பாண்டிய நாடு விவாதத்தை கிளப்பி இருக்கின்றனர்.

பிரிவினை மேப்கள்
சில விவாதங்கள் நகைச்சுவையாக செல்ல சில விவாதங்கள் காரசாரமாக சென்று கொண்டிருக்கின்றன. மூவேந்தர்களுடன் பல்லவர்கள் ஆண்ட பகுதிகளையும் சேர்த்து தமிழ்நாட்டை 4 பிரிவுகளாக பிரித்து மேப்களை வெளியிட்டு வருகின்றனர். இது தகவலுக்காகதான் என்றாலும், இதன் அடிப்படையில் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற கருத்துக்களையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

பாஜக, இந்து மக்கள் கட்சி
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டை பிரிக்கவேண்டும் என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே ஒலித்து வருகின்றன. இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டை ஆந்திரா போல் 2 ஆக பிரிக்க வேண்டும் எனக் கேட்போம். பல்லவ நாடு, பாண்டிய நாடு என்று பிரித்தால் பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக வர முடியும். பிரதமர் மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை எங்களால் பிரிக்க முடியும்." என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரிவினை கோரிக்கைகள்
கடந்த ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டை 3 ஆக பிரிக்க வலியுறுத்தி இருந்தார். 1976 ஆம் ஆண்டிலேயே எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் ஒரு மாநாட்டை நடத்தி வட தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோரினார். இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த சேதுராமன் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். கொங்குநாடு முன்னேற்றக்கழகம் என்ற கட்சி கோவையை தலையிடமாகக் கொண்டு மேற்கு தமிழ்நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் கோரிக்கையை முன்வைத்தே உருவாக்கப்பட்டது.

சாதி அடிப்படை
மாநில மறுசீரமைப்பு என்பது மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய தமிழ்நாடு உருவானது. ஆனால், அதை மூன்றாக பிரிக்க சொல்வது பகுதி அடிப்படையில் என்று நினைப்பதை விட சாதி அடிப்படையில் பிரிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழ்நாடு மூன்று மாநில கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகள், அமைப்புகள் யாவும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை பின்புலமாக கொண்டவை.

தமிழ்நாடு என்னும் சமத்துவ பூமி
வட மாநிலங்களில் சாதி, மத அடிப்படையில் மக்களின் வாக்குகளை திரட்டி தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கின்றன. ஆனால், சமத்துவ பூமியான தமிழ்நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை ஆதரிக்கும் சக்திகள் இதுவரை ஆட்சியை கைப்பற்றியது கிடையாது. சமூக நீதியை கொள்கையாக கொண்ட பெரியார், அண்ணா வழிவந்த திமுகவும் அதிமுகவுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர்.

சாதி ஒடுக்குமுறைகள்
எனவே 3 மாநிலங்களாக பிரித்துவிட்டால், அந்தந்த மண்டலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதிகளை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியலில் ஆதாயம் அடையலாம் என்று நினைப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம், அந்தந்த பகுதிகளில் சிறுபான்மை சமூகமாக வசித்து வருபவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அரசியல் பலம் இழந்து அவர்கள் மீதான சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அதிகரிக்க காரணமாகிவிடும் என்ற அச்சம் எழாமல் இல்லை. எனவே சாதி, மத ரீதியில் பிரிந்துவிடாமல் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து சதிகளை முறியடித்து சரித்திரம் படைப்போம்.












Click it and Unblock the Notifications