சிக்கலை கொடுத்த “சிவி” -தேனிக்கு எதிராக “கலவர” நிலவரம்.. ஓபிஎஸ் உட்பட 200 பேர் மீது சிபிசிஐடி வழக்கு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில் கட்சி தலைமையகத்தை கைப்பற்றிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றனர். அப்போது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனை தொடர்ந்து இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.
சீனுக்கு வந்த எல்.முருகன்.. ஓரம்கட்டப்படுகிறாரா அண்ணாமலை? வந்த வேகத்தில் பாஜகவில் சரியும் “மவுசு”
முன்ஜாமின் வழக்கு
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஈ.பி.எஸ். தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 27 பேர் என 64 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சதிஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பை சேர்ந்த 64 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திடவும், தலா 20 ஆயிரம் ரூபாயை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனைகளை விதித்துள்ளார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு அண்மையில் மாற்றி உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டார். மேலும், அந்த விசாரணைக் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ் மீது வழக்கு
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 200 பேர் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்யும் வேலையையும் சிபிசிஐடி தொடங்கி இருக்கிறது.