கோவிஷீல்டு தடுப்பூசி... 2-வது டோஸ் போடும் கால அவகாசம் நீட்டிப்பு... மத்திய அரசு கடிதம்
சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
கொரோனா தடுப்பூசிகள் நான்கு வார இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது நான்கு வாரங்களாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸின் கால அளவை 6 முதல் 8 வாரங்களாக உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
காரணம் என்ன
இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பூசியின் பலன் அதிகமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதேநேரம் இரண்டாவது டோஸை நிச்சயமாக எட்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் தடுப்பூசி பலன் குறைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோவிஷீட்டுக்கு மட்டும்
மேலும், இந்த கால அவகாச நீட்டிப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வழக்கமான கால இடைவெளியிலேயே செலுத்த வேண்டும் என்றும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும் 30,000ஐ கடந்துள்ளது. அதேநேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்கள் என நாடு முழுவதும் மொத்தம் 4.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.