விக்னேஷை துரத்தும் போலீஸ்... மரணத்திற்கு முன் கடைசி நிமிடங்கள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
சென்னையில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த இளைஞர் விக்னேஷை போலீசார் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: போலீஸ் லாக்அப்பில் உயிரிழந்த விசாரணை கைதி விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி போலீசாரிடம் இருந்து தப்பும்போது காவலர்கள் அவரை துரத்தி பிடித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஜொள்ளு சுரேஷ் 28, பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா,25 ஆகியோர் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.
வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 19.4.2022-ம் தேதி காலையில் இருவருக்கும் போலீஸார் உணவு வழங்கினர். சிறிது நேரத்தில் விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த டாக்டர்கள், நாடி துடிப்பு குறைவாக உள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்தபோது வரும்வழியில் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கைதி விக்னேஷ் மரணம்
விசாரணையின்போது கைதி விக்னேஷ் உயிரிழந்ததால் எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் 19.4.2022-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு 20ஆம் தேதி விக்னேஷ் சடலம் அவனின் அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
போலீஸ் தாக்கியதால் மரணம்
விக்னேஷை விசாரித்த போலீசார் அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்ததாகவும் பின்னர் ரத்த காயங்களுடன் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் 19 ஆம் தேதி காலை வலிப்பு, வாந்தி ஏற்பட்டது விக்னேஷ் இறந்துவிட்டார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையின் போது விக்னேஷ் மரணம் அடைந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்.ஐ உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
சட்டசபையில் முதல்வர் விளக்கம்
விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், சட்டசபையில், அதிமுக கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்தது. வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு விக்னேஷ் மற்றும் அவரது நண்பரான திருவல்லிகேணியைச் சேர்ந்த சுரேஷ் ஆட்டோவில் புரசைவாக்கம் கெல்லீஸ் சாலையில் வந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி ஸ்டேஷன் எஸ்ஐ பெருமாள், காவலர் பொன்ராஜ் ஊர்காவல் படை காவலர் தீபக், அந்த ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். விசாரணையின்போது இருவரும் கஞ்சா போதையில் தெரிய வந்தது.
ரூ.10 லட்சம் நிவாரணம்
அவர்களை போலீசார் காவல் நிலையம் கொண்டு செல்ல முற்பட்டபோது விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை குத்த முயற்சித்துள்ளளார். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மறுநாள் காலை வரை ஸ்டேஷனில் இருந்த இவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விக்னேஷுக்கு வாந்தி, வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொன்று செல்லப்பட்டதாகவும் அங்கு விக்னேஷ் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், விக்னேஷின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், விக்னேஷின் நண்பரான சுரேஷுக்கு அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணத்தில் தீவிர விசாரனை என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறினார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
விக்னேஷ் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திக்கேயன் தகவல் தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை, துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படை தீபக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் சம்பவத்தன்று போதையில் இருந்துள்ளனர். மேலும் போலீஸார் அவர்களைப் பிடித்ததும் கத்தியை எடுத்து காவலர்களை தாக்க முயன்றுள்ளனர். அதில் தள்ளுமுள்ளு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விக்னேஷை அடித்தே போலீஸார் கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் விக்னேஷ் உயிரிழந்தது எப்படி என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிசிடிவி காட்சி
இதனிடையே கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் விக்னேஷை காவலர்கள் துரத்து பிடித்து அடித்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே போலீசாரின் தாக்குதலால் விக்னேஷ் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றசாட்டியுள்ள நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.