டிசம்பர் 3ல் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள்.. இவங்க மட்டும் வந்தா போதும்.. வெளியான அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 3ம் தேதியான சனிக்கிழமை வேலைநாள் எனவும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. துவக்கம் முதலே சென்னையில் பருவமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் மழை பெய்வதை கணித்து வானிலை ஆய்வு மையம் கூறி வந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடுமுறைகள் அளிக்கப்பட்டன.
பெருமழையில் மூழ்கிய பள்ளிகள்.. சீர்காழி, தரங்கம்பாடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சனிக்கிழமை பள்ளிகள்
கடந்த மாதம் மட்டும் தலைநகர் சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்புகள் விடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை என்பது சற்று குறைந்து காணப்படுகிறது. பள்ளிகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. விரைவில் அரையாண்டு தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மழைக்காக விடுமுறை வழங்கப்பட்டதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை தொடர்பான அறிவிப்பு
அதன்படி மாவட்டத்தில் உள்ள மழை நிலைமையை பார்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் சனிக்கிழமை பல மாவட்டங்களில் பள்ளிகள் இயங்க உள்ளது. அந்த வகையில் தான் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சார்பில் இன்று அறிவிப்பு ஒன்று வெளியானது.
6 முதல் 12 வரை வகுப்புகள்
அதன்படி, சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமையான டிசம்பர் 3ம் தேதி வேலை நாளாகும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.
ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை
மாறாக அன்றைய தினம் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம். அவர்களுக்கு அன்றைய தினம் விடுமுறையாகும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார்.