வன்கொடுமை தடை சட்டம்.. தயாநிதிமாறன், டிஆர் பாலு மே 29 வரை மீது நடவடிக்கை கூடாது.. ஹைகோர்ட்
சென்னை: வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மே 29-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார். அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் தரப்பில், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பவர் அனுமன் சேனா அமைப்பை சேர்ந்தவர்.
18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்
ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை கோரிதான் தலைமை செயலாளரை சந்தித்தோம். ஆனால் அவரோ எங்கள் கோரிக்கைகள் மீது மதிப்பளிக்கவோ அல்லது எங்களை முறையாக நடத்தவோ இல்லை. அதனால் சபாநாயகரை சந்தித்து முறையிட்டோம். தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின்படியே எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதால் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கோவையில் பதிவான வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அதுவரை காவல்துறை எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என உத்தரவிட்டார்.