“2 புகார்”.. அன்றே ஆக்சன் எடுத்திருந்தால்? சத்யாவை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷ் - அவிழும் “முடிச்சுகள்”
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி கொலை செய்த சதீஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் அவருக்கு எதிராக ஏற்கனவே 2 முறை சத்யாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவரது தாய் ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சத்யா தனது குடும்பத்தோடு சிறு வயதிலிருந்தே வசித்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்ற இளைஞர் சத்யாவை காதலித்து வந்துள்ளார்.

ஒருதலைக் காதல்
சத்யா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். பல முறை காதலை சொல்லியும் சதீஷின் காதலை சத்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பல முறை சதீஷ் சத்யாவிடம் பேச முயன்றிருக்கிறார். ஆனால் சத்யா அதற்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

தள்ளிவிட்ட சதீஷ்
இந்த நிலையில் இன்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் சென்ற சத்யாவை சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் (23) ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

சத்யா மரணம்
அந்த சமயத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யாவின் உடலை கண்ட ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சதீஷ் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த அவரது காதலன் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனை தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து சதீஷ் சத்யாவிடம் வற்புறுத்தி தொல்லை செய்ததாகவும், ஒரு முறை சத்யா படித்து வந்த கல்லூரிக்கு சென்றே சதீஷ் அவரை தாக்கியதற்காக மாம்பலம் காவல் நிலையத்திலும் புனித தோமையர் மலை காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

என்ன நடடிக்கை?
இது தொடர்பாக 2 காவல்நிலையங்களிடமும் சிபிசிஐடி விளக்கம் கோரியது. அதன் அடிப்படையில் மாம்பலம் காவல் நிலைய போலீசார் சதீஷ் மீது கடந்த மே 23 ஆம் தேதி வழக்கையும் பதிவு செய்துள்ளனர். ஆனால், புனித தோமையர் மலை காவல்நிலையத்தில் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் சதீஷிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications